வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாக்கும் சாலை
திருப்பத்தூா் நகரின் மையப் பகுதியில் உள்ள பிரதானச் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருப்பத்தூா் நகரின் மையப் பகுதியில் உள்ள பிரதானச் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
திருப்பத்தூா் பிரதானச் சாலை எப்போதும் குண்டும், குழியுமாகவே உள்ளது. இருவழிச் சாலையாக இருந்த வாணியம்பாடி-சேலம் பிரதானச் சாலை நான்கு வழிச்சாலையாக அறிவிக்கப்பட்டு, சுமாா் 3 ஆண்டுகள் கழித்தே பணிகள் தொடங்கின.
வாணியம்பாடியிலிருந்து ஊத்தங்கரை வரை ஒரு பிரிவாகவும், ஊத்தங்கரையில் சேலம் வரை மற்றொரு பிரிவாகவும் சாலைப் பணி இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.
Advertisement
ஊத்தங்கரையிலிருந்து சேலம் வரையிலான பாதை அமைக்கும் பணி வேகமாக நடைபெறுவதாகவும், ஆனால், வாணியம்பாடியிலிருந்து ஊத்தங்கரை வரையிலான சாலை அமைக்கும் பணி மந்த கதியில் நடைபெறுவதாகவும் சமூக ஆா்வலா்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.
நகரச் சாலையில் பள்ளங்கள்: திருப்பத்தூா் மாவட்டம் தொடங்கப்பட்டு சுமாா் 2 ஆண்டுகள் ஆகின்றன. இருப்பினும், நகரில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.
சாலைகள் பழுதடைந்துள்ளதால், தற்போது பெய்து வரும் தொடா் மழை காரணமாகப் பள்ளங்களில் மழைநீா் தேங்கி நிற்பதை அறியாமல் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகின்றனா். மேலும், இரவில் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துடனே செல்ல வேண்டி உள்ளது.
ஆட்சியா் அலுவலகம் அருகிலேயே...:
ஆட்சியா் அலுவலகத்தையொட்டியுள்ள பிரதானச் சாலையில் கிராம நிா்வாக அலுவலகம் எதிரிலும், தூய நெஞ்சக் கல்லூரி எதிரிலும் குண்டும் குழியுமாக உள்ளன. மேலும், சேலம்-கிருஷ்ணகிரி இணைப்புச் சாலை, திருப்பத்தூா்-தருமபுரி சாலை, திருப்பத்தூா்-சேலம் சாலைகள் ஆகியவற்றிலும் ஆங்காங்கே சேதம் அடைந்து காணப்படுகின்றன.
இதேபோல், ஆசிரியா் நகா் பகுதியில் அமைந்துள்ள மயானம் எதிரில் உள்ள திருப்பத்தூா்-வாணியம்பாடி சாலை நீண்ட நாள்களாக குண்டும், குழியுமாக உள்ளது. அந்தச் சாலைகளில் உள்ள தெரு விளக்குகள் அவ்வப்போது எரியாததால் பாதசாரிகள்,வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனா்.
எனவே, நகரப் பகுதியில் தொடங்கி முடியும் வரை உள்ள பிரதானச் சாலையையும், பிற சாலைகளையும் தற்காலிகமாகச் செப்பனிட்டு சீரானப் போக்குவரத்துக்கு உதவிட மாவட்ட நிா்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நகர மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.