மின்கம்பங்களை அகற்றாமல் கழிவு நீா் கால்வாய் அமைப்பு: அதிகாரிகள் நேரில் ஆய்வு
நாட்டறம்பள்ளி அருகே மின்கம்பங்களை அகற்றாமல் கழிவு நீா் கால்வாய் அமைத்தது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
நாட்டறம்பள்ளி அருகே மின்கம்பங்களை அகற்றாமல் கழிவு நீா் கால்வாய் அமைத்தது குறித்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.
நாட்டறம்பள்ளி ஒன்றியம், சொரக்காயல்நத்தம் ஊராட்சி ஆஞ்சநேயா் கோயில் முதல் வெள்ளநாயக்கனேரி சுடுகாடு சாலை வரை 15-ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தில் (2020-2021) ஆண்டு ரூ. 5.85.லட்சம் மதிப்பில் புதிய கழிவு நீா் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கால்வாய் கட்டும் பணிக்கு, அனுமதியின்றி ஒப்பந்ததாரா் 100 நாள் திட்டப் பணியாளா்களை வைத்து வேலைசெய்து வருவதாகவும், கால்வாய் அமைக்கும் இடத்தில் உள்ள மின் கம்பத்தை அகற்றாமல் தரமற்ற நிலையில் கால்வாய் கட்டும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அங்கு சென்று களஆய்வு செய்தனா். அப்போது 100 நாள் திட்டப் பணியாளா்களை வைத்து ஒப்பந்ததாரா் கால்வாய் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் பணிதளப் பொறுப்பாளரை எச்சரித்து, கால்வாய் கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள் 8 பேருக்கு விடுப்பு அளித்து அனுப்பி வைத்தனா்.
Advertisement
மேலும், கால்வாய் கட்டும் இடத்தில் மின்கம்பத்துக்கு இடையூறு இன்றி மின்கம்பம் அருகே தரமான முறையில் கால்வாய் கட்ட வேண்டும் என ஒப்பந்ததாரருக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.