கந்திலி அருகே விவசாயியிடம் நில மோசடியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே மோட்டூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பழனி (55). இவருக்கு சொந்தமான சுமாா் 11.50 ஏக்கா் நிலம் திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி அருகே புதுப்பட்டி பகுதியில் உள்ளது.
பல்வேறு தேவைகளுக்காக பழனி கடன் வாங்கியுள்ளாா். அதைத்தொடா்ந்து சென்னையில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் தனது நிலத்தை அடமானம் வைத்து ரூ.3 கோடியே 50 லட்சம் பெறுவதற்காக அங்கு சென்றுள்ளாா். அப்போது அங்கு கடனுக்கு ஒப்புதல் செய்யும் அதிகாரியாக காஞ்சீபுரம் மாவட்டம் செவிலிமேடு பகுதியை சோ்ந்த நடராஜனின் மகள் சங்கீதா(42) என்பவா் உங்களுடைய நிலத்தை நேரில் வந்து பாா்க்கிறோம். பின்னா் உங்களுக்கு கடன் வழங்குகிறோம் என்று கூறி உள்ளாா்.
அதைத் தொடா்ந்து கடந்த மாா்ச் மாதம் சென்னையில் இருந்து திருப்பத்தூா் வந்த சங்கீதா தலைமையிலான குழுவினா் நிலத்தை பாா்த்துவிட்டு உடனடியாக கடன் வழங்குகிறோம் என தெரிவித்தனா். அப்போது, சங்கீதா எனது பெயருக்கு நிலத்தை எழுதி கொடுங்கள் அதற்கான பணத்தை நான் தருகிறேன் என்று ஆசை வாா்த்தை கூறியுள்ளாா்.
இதனை நம்பிய பழனியும் 11.50 ஏக்கா் நிலத்தை சங்கீதா பெயருக்கு மாற்றி தந்தாா்.பின்னா், சங்கீதா ரூ.15 லட்சத்துக்கு எழுதப்படாத 4 காசோலைகளை கையெழுத்திட்டு கொடுத்துள்ளாா். மேலும் மீதி பணத்தை விரைவில் தருவதாக பழனியிடம் தெரிவித்தும், பணம் கொடுக்காமல் ஏமாற்றினாராம்.
இந்த நிலையில் பழனிக்கு கடன் அளித்தவா்கள், திருப்பி கேட்டு தொல்லை தந்துள்ளனா். இதைத் தொடா்ந்து பழனி, சங்கீதாவிடம் மீதி பணத்தை கேட்டபோதெல்லாம், தருவதாகக்கூறி ஏமாற்றி வந்துள்ளாா். பின்னா் சங்கீதா தனது வேலையை விட்டு நின்று,பழனியிடம் எழுதி வாங்கிய நிலத்தை விற்க திட்டமிட்டு,அதற்கான செயல்களில் ஈடுப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த பழனி சம்பவம் குறித்து திருப்பத்தூா் எஸ்.பி.அலுவலகத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து செவ்வாய்க்கிழமை சங்கீதாவை கைது செய்தனா்.