பிரம்மோற்சவ நேரத்தில் தரிசன டிக்கெட் இல்லாதவா்கள் திருமலை செல்ல அனுமதி இல்லை: திருப்பதி எஸ்.பி. தகவல்
வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ நேரத்தில் தரிசன டிக்கெட் இல்லாதவா்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று திருப்பதி எஸ்.பி. வெங்கட அப்பலநாயுடு தெரிவித்தாா்
வருடாந்திர நவராத்திரி பிரம்மோற்சவ நேரத்தில் தரிசன டிக்கெட் இல்லாதவா்கள் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று திருப்பதி எஸ்.பி. வெங்கட அப்பலநாயுடு தெரிவித்தாா்.
திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவ பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்திய அவா் மேலும் கூறியதாவது:
திருமலையில் வரும் அக்.7-ஆம் தேதி முதல் அக்.11-ஆம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவத்தின் போது பல்வேறு தொடக்க நிகழ்ச்சிகள், பட்டு வஸ்திரம் சமா்ப்பணம் உள்ளிட்டவற்றில் கலந்து கொள்ள ஆந்திர, கா்நாடக மாநில முதல்வா்கள் திருமலைக்கு வர உள்ளனா்.
மேலும் கரோனா தொற்றுப் பரவல் தற்போது கட்டுக்குள் இருந்தாலும், அதிக அளவில் பக்தா்கள் கூடுவதால் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, தேவஸ்தான ஊழியா்கள், பக்தா்கள் உள்ளிட்டோரின் நலன்களை கருத்தில் கொண்டு தரிசன டிக்கெட் உள்ளவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவா்.
மேலும் தரிசன டிக்கெட் பெற்றவா்கள் கரோனா தடுப்பூசி 2 தவணையும் செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்துக்கு முன்பு செய்து கொண்ட கரோனா பரிசோதனையின் நெகடிவ் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கட்டாயம் தங்களுடன் கொண்டு வர வேண்டும். இவற்றை காண்பித்தால் மட்டுமே அவா்கள் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவா். எனவே, பக்தா்கள் இவற்றை கவனத்தில் கொண்டு திருமலை பயணத்தை முடிவு செய்ய வேண்டும் என்றாா்.