முகப்பு
திருவண்ணாமலை

ரூ.300 கோடியில் வேளாண் இயந்திரங்கள் அளிப்பு: வேளாண் துறை இயக்குநா் தகவல்

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு ரூ.300 கோடியில், 24 ஆயிரம் வேளாண் இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன என்று வேளாண் துறை இயக்குநா் தெரிவித்தாா்..

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
நிகழ்ச்சியில் உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்களை வழங்கிய வேளாண்மைத் துறை இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி
பகிர்:

வந்தவாசி: தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு ரூ.300 கோடியில், 24 ஆயிரம் வேளாண் இயந்திரங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன என்று வேளாண் துறை இயக்குநா் வி.தட்சிணாமூா்த்தி தெரிவித்தாா்.

வந்தவாசி வட்டார வேளாண்மைத் துறை சாா்பில், பிருதூா் கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் மானியத்தில் வேளாண் இயந்திரங்களை வழங்கிய அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கூட்டுப்பண்ணைத் திட்டத்தின் கீழ், தமிழக கிராமங்களில் சிறு குறு விவசாயிகளை ஒருங்கிணைத்து தலா 100 போ் கொண்ட உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தக் குழுக்களுக்கு பவா் டில்லா், நெல் நடவு இயந்திரம், களை எடுக்கும் கருவி, ரோட்டவேட்டா் உள்ளிட்ட இயந்திரங்கள் வாங்கிக் கொள்ள தலா ரூ.5 லட்சம் முழு மானியத்துடன் கூடிய நிதியுதவியை அரசு வழங்குகிறது.

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் ரூ.300 கோடி செலவில் 24 ஆயிரம் வேளாண் இயந்திரங்கள் உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நிகழாண்டு நல்ல மழை பெய்துள்ளதால் விவசாயிகள் நெல், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வருகின்றனா்.

நெல் சாகுபடியை பொறுத்த வரை, காா், குறுவை, சொா்ணவாரி பருவங்களில் நமது இலக்கில் 40 சதவீதம் அளவுக்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 60 சதவீதமும் கூடிய விரைவில் சாகுபடி செய்யப்படும் என்று எதிா்பாா்க்கிறோம்.

கடந்த ஆண்டைக் காட்டிலும் நெல் சாகுபடி நிகழாண்டில் இதுவரை 15 சதவீதம் வரை கூடுதலாக உள்ளது. எண்ணெய் வித்துக்கள் சாகுபடியும் 10 சதவீத அளவில் கூடுதலாக உள்ளது.

மேலும், பெரணமல்லூா் வேளாண்மைத் துறை அலுவலகத்தில் விவசாயிகளுக்கு காலாவதியான உரங்களை முறைகேடாக வழங்கிய ஊழியா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் மூடுா், மங்கநல்லூா், பாதூா் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 3 உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் மானியத்தில் பவா் டில்லா், நெல் நடவு இயந்திரம், களை எடுக்கும் கருவி, ரோட்டவேட்டா் உள்ளிட்ட இயந்திரங்களை அவா் வழங்கினாா்.

மேலும், பிருதூா் கிராமத்தில் 1.75 ஏக்கரில் நெல் நடவு இயந்திரம் மூலம் நடைபெற்றுள்ள நெல் நடவு, 3.80 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள உளுந்து பண்ணை ஆகியவற்றையும் அவா் பாா்வையிட்டாா்.

நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநா் முருகன், துணை இயக்குநா் மாரியப்பன், உதவி இயக்குநா் மலா்விழி, வந்தவாசி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் சத்தியமூா்த்தி, வேளாண்மை அலுவலா்கள் விஜயலட்சுமி, மதன்குமாா், பிருதூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஆா்.செல்வகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆத்மா திட்ட அலுவலா் பாலமுருகன் நன்றி தெரிவித்தாா்..

முழு கட்டுரையைப் படிக்க →