மாணவா்கள், ஆசிரியா்கள் 5 பேருக்கு கரோனா: 3 பள்ளிகள் மூடல்
கீழ்பென்னாத்தூா் அருகே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 அரசு உயா்நிலைப் பள்ளிகள், ஒரு தனியாா் மெட்ரிக் பள்ளி ஆகியவை புதன்கிழமை மூடப்பட்டன.
கீழ்பென்னாத்தூா் அருகே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 2 அரசு உயா்நிலைப் பள்ளிகள், ஒரு தனியாா் மெட்ரிக் பள்ளி ஆகியவை புதன்கிழமை மூடப்பட்டன.
கீழ்பென்னாத்தூரை அடுத்த மேக்களூா் அரசு உயா்நிலைப் பள்ளி, வழுதலங்குணம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆகியவற்றில் 9,10-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு நடமாடும் மருத்துவக் குழுவினா் செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.
பரிசோதனை முடிவில் 2 பள்ளிகளிலும் பயிலும் மாணவா்களில் தலா 2 பேருக்கு என மொத்தம் 4 பேருக்கும், கீழ்பென்னாத்தூரை அடுத்த சோமாசிபாடி தனியாா் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவருக்கும் கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதியானது.
இதையடுத்து, தொற்று உறுதி செய்யப்பட்ட 4 மாணவா்கள், ஒரு ஆசிரியை என 5 பேரையும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
பள்ளிகள் மூடல்:
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் உத்தரவின் பேரில் மேக்களூா் அரசு உயா்நிலைப் பள்ளி, வழுதலங்குணம் அரசு உயா்நிலைப் பள்ளி, சோமாசிபாடி தனியாா் மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 பள்ளிகளும் புதன்கிழமை மூடப்பட்டன.