மக்கள் நலப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் மக்கள் நலப் பணியாளர்கள் வியழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூரில் மக்கள் நலப் பணியாளர்கள் வியழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மக்கள் நலப் பணியாளர்கள் 13,500 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், பிப்ரவரி 28-ஆம் தேதி தமிழக முதல்வர் இல்லம் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை 100-க்கும் மேற்பட்டோர் அந்த அமைப்பின் மாநிலப் பொருளாளர் ரங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தவும், சென்னையில் நடைபெற உள்ள காத்திருப்புப் போராட்டம் குறித்த துண்டுப் பிரசுரங்களையும் விநியோகிக்க முயன்றனர்.
அப்போது, அங்கு வந்த டி.எஸ்.பி. ஜேசுராஜ் தலைமையிலான போலீஸார் போராட்டம் நடத்தவும், துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கவும் அனுமதி இல்லை என்று கூறினர். பின்னர், சிறிது நேரத்துக்குப் பிறகு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து மக்கள் நலப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.