"கல்வி கற்க ஏழ்மை தடையல்ல'
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏழ்மையை ஒரு தடையாக எண்ணக்கூடாது என்று கவிஞர் கவிதாசன் பேசினார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஏழ்மையை ஒரு தடையாக எண்ணக்கூடாது என்று கவிஞர் கவிதாசன் பேசினார்.
காரமடை எஸ்விடி அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் வாரம் ஒரு பக்தி சொற்பொழிவின் 100-ஆவது வாரவிழா அரங்கநாத சுவாமி கோயில் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, எஸ்விடி அறக்கட்டளை தலைவர் ருக்மணி அம்மாள் தலைமை வகித்தார். அரங்கநாதர் கோயில் ஸ்தலத்தார் சுதர்சன பட்டர் சுவாமிகள் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை நிர்வாகி சி.என். ராஜேந்திரன் வரவேற்றார். அறக்கட்டளை நிறுவனர் சக்திவேல் ஆண்டு அறிக்கை வாசித்தார். விழாவை கோயில் செயல் அலுவலர் விமலா துவக்கி வைத்தார்.
இதில் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவிஞர் கவிதாசன் பேசியதாவது:
மாணவர்கள் வெற்றியை மட்டும் முதன்மையாக கருதாமல், முதலிடம் பெறுவதையே நோக்கமாக கொண்டு செயல்பட வேண்டும். அதற்கு புத்தகக் கல்வியுடன், பிற திறன்களையும் வளர்த்துக் கொள்வது அவசியம். இதற்கு எண்ணங்களை செழுமைப்படுத்தி, நேர்முறையில் கொண்டு செல்வது மிக அவசியம். மாணவர்கள் சிறுவயது முதலே தூய்மையான எண்ணத்துடன் இறைவன் மீது நாட்டம் கொண்டு ஆன்மிக பற்றுடன் வாழ்ந்து வந்தால் வாழ்வில் எந்த இலக்கையும் அடையும் மன வலிமையை பெறலாம் என்றார்.
இதைத் தொடர்ந்து, ஸ்தலத்தார் சுதர்சன பட்டர் சுவாமிகள், வாழும் கலை பயிற்சியாளர் சசிகுமார், பேராசிரியர் துரைசாமி, அறக்கட்டளை நிர்வாகிகள் புலவர்கள் தாச. அரங்கசாமி, பழ. அரங்கப்பன் உள்பட பலர் பேசினர்.
விழாவில் நடைபெற்ற பேச்சு, பாட்டு போட்டிகளில் பல்வேறு பள்ளிகளிலிருந்து 52 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கு கவிஞர் கவிதாசன், ஸ்தலத்தார் சுவாமிகள் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
இதில் 100 வாரம் பக்தி சொற்பொழிவு நடத்திய ஆன்மிக பேச்சாளர்களும், தமிழ் அறிஞர்களும் கெளரவிக்கப்பட்டனர். அறக்கட்டளை சார்பில் அமரகவி நன்றி கூறினார்.