பெண்களிடம் நகைப் பறிப்பு: 3 பேர் கைது
கோவையில் பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டதாக சிறுவன் உள்பட மூன்று பேரைத் தனிப் படையினர் கைதுசெய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 15 பவுன் நகைகளும் மீட்கப்பட்டன.
கோவையில் பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டதாக சிறுவன் உள்பட மூன்று பேரைத் தனிப் படையினர் கைதுசெய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 15 பவுன் நகைகளும் மீட்கப்பட்டன.
கோவை மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட போத்தனூர், ராமநாதபுரம், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தனியாகச் செல்லும் பெண்களிடம், இருசக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்கள் நகைப் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினருக்கு அதிக அளவில் புகார்கள் வரத்தொடங்கியது. இதையடுத்து, காவல் ஆணையர் கு.பெரியய்யா உத்தரவின்பேரில் துணை ஆணையர் பி.பெருமாளின் நேரடி மேற்பார்வையில் உதவி ஆணையர் சோமசுந்தரம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்தத் தனிப்படையினர் பல்வேறு இடங்களில் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் செல்வது கேமராவில் பதிவாகியிருந்தது. இந்தப் பதிவை வைத்து நடத்திய விசாரணையில் மூன்று பேரை தனிப் படையினர் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனர்.
இதில், போத்தனூரைச் சேர்ந்த விக்னேஷ் (20), மணிகண்டன் (19), மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவர்களிடமிருந்து 15 பவுன் நகையும் மீட்கப்பட்டது.