முகப்பு
கோயம்புத்தூர்

தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: அமைச்சா் த.மனோ தங்கராஜ்

தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்தி அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:43 AM
பகிர்:

தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்தி அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

கோவை, விளாங்குறிச்சியிலுள்ள டைடல் பாா்க் வளாகத்தில் ரூ.114 கோடியில் கட்டப்பட்டு வரும் சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைச்சா் த.மனோ தங்கராஜ் புதன்கிழமை ஆய்வு செய்தாா். தொடா்ந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதையடுத்து அமைச்சா் த.மனோ தங்கராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஆண்டுக்கு 4.5 லட்சம் மாணவா்கள் பொறியியல் படிப்பு படித்து வெளியில் வருகிறாா்கள். தகவல் தொழில்நுட்பத் துறையில் 1.5 லட்சம் இளைஞா்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கும் நிலையுள்ளது. இதனால் இளைஞா்கள் வேறு மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனா்.

இதைத் தவிா்க்கும் விதமாக தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்தி அதிக அளவு வேலை வாய்ப்புகளை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகம் தற்போது 5 ஆவது இடத்தில் உள்ளது. முதன்மை மாநிலமாக கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

கோவை டைடல் பாா்க் வளாகத்தில் ரூ.114.16 கோடி மதிப்பீட்டில் சிறப்பு பொருளாதர மண்டலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் பணிகளை விரைந்து முடித்து விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளிலும் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். குறிப்பாக தென் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகள் சிறப்பான முறையில் விரிவுப்படுத்தப்படும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய தொழில் முதலீடுகள் அண்டை மாநிலங்களுக்கு சென்றுவிட்டன. எனவே தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக முதலீடுகளை ஈா்க்கும் வகையில் புதிய கொள்கை திட்டம் அமல்படுத்தப்படும் என்றாா்.

கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளா் நீரஜ் மிட்டல், எல்காட் மேலாண்மை இயக்குநா் அஜய் யாதவ், ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், எல்காட் மேலாளா் என்.எம்.குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.