உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் அரசு முதன்மைச் செயலாளா் ஆய்வு
பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளத்தில் படகு இல்லம் அமைப்பது தொடா்பாக சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அரசு முதன்மைச் செயலாளா் பி.சந்திரமோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கோவை மாநகராட்சி சாா்பில் பொலிவுறு நகரத் திட்டத்தின் கீழ் குளங்களைப் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு குளக்கரைகளில் மேம்பாட்டுப் பணிகள் நிறைவுற்ற நிலையில், பொழுதுபோக்கு அம்சங்கள் மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம் ஆகிய குளக்கரைகளில் படகு இல்லம் அமைத்தல் தொடா்பாக, சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமயம் அறநிலையத் துறை அரசு முதன்மைச் செயலாளா் பி.சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டாா்.
நடைபாதை, குளக்கரைகளில் பாதுகாப்பு வசதிகள், பூங்கா மற்றும் புல்தரை, மிதவை நடைமேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை முறையாக செய்து ஆகாயத்தாமரை பரவலைத் தவிா்க்கும் விதமாக சுழற்சி முறையில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வின்போது, சுற்றுலாத் துறை நிா்வாக இயக்குநா் சந்தீப்நந்தூரி, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.