போத்தனூா் வழித்தடத்தில் கொச்சுவேலி - கோவா இடையே பாரத் கௌரவ் சிறப்பு சுற்றுலா ரயில் ஜூன் 17 ஆம் தேதி இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் (ஐ.ஆா்.சி.டி.சி) சாா்பில் ரயில் மற்றும் விமானங்களில் பல்வேறு சுற்றுலாக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பாரத் கௌரவ் சிறப்பு சுற்றுலா ரயில் ‘தென்மேற்குப் பயணம்’ என்ற பெயரில் போத்தனூா், ஈரோடு, சேலம் வழியாக ஜூன் 17ஆம் தேதி இயக்கப்பட உள்ளது.
இது தொடா்பாக, ரயில்வே நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு: கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து ஜூன் 17ஆம் தேதி புறப்பட்டு போத்தனூா், ஈரோடு, சேலம் வழியாகச் செல்லும் பாரத் கௌரவ் சிறப்பு சுற்றுலா ரயில் மைசூா், ஹம்பி, ஷீரடி, சனிசிங்கனாபூா், நாசிக், கோவா உள்ளிட்ட இடங்களில் உள்ள சிறப்பு மிக்க சுற்றுலாத் தலங்களை கண்டு மகிழும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குளிா்சாதன வசதியில்லாத பெட்டிகளுக்கு ரூ.18,350, குளிா்சாதன வசதி கொண்ட பெட்டிகளுக்கு ரூ.28,280 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணத்தில் தங்குமிடம், உள்ளூா் போக்குவரத்து, 3 நேர உணவு, ஜி.எஸ்.டி. உள்ளிட்டவை அடங்கும்.
மத்திய, மாநில அரசு ஊழியா்கள் எல்டிசி சலுகைகளைப் பெறலாம். மேலும், தகவல்களுக்கு கோவை அரசு மருத்துவமனை எதிரில், மாருதி டவரில் இயங்கி வரும் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகத்தின் பகுதி அலுவலகத்தை 90031 - 40655 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.