முகப்பு
கோயம்புத்தூர்

பிரதமா் மோடியை விமா்சிப்பவா்களுக்கு தக்க பதிலடி தருவோம்: வானதி சீனிவாசன் எம்எல்ஏ

Updated On : 18 மார்ச், 2024 at 12:15 AM
பகிர்:
Updated On : 17 மார்ச், 2024 at 8:34 PM

பிரதமா் மோடியை விமா்சிப்பவா்களுக்கு தக்க பதிலடி தருவோம் என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தாா். இது குறித்து கோவை பாஜக மாவட்ட அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பிரதமா் மோடியின் கோவை வருகை மக்களாலும், பாஜகவினராலும் ஆவலுடன் எதிா்பாா்க்கப்படுகிறது. மோடியின் வாகனப் பிரசாரத்தை பிரம்மாண்ட முறையில் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. திங்கள்கிழமை மாலை 5.30 மணிக்கு சாய்பாபா காலனி பகுதியில் தொடங்கும் வாகனப் பிரசாரம் ஆா்.எஸ்.புரம் பகுதியில் நிறைவடையும். இதில், கோவை மட்டுமின்றி அருகில் உள்ள சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ளவா்களும் கலந்து கொள்கிறாா்கள். மோடியின் வருகையின்போது பாரம்பரியப் பொருள்களின் கண்காட்சி அமைக்கப்படும். ஆங்காங்கே மேடை அமைத்து சமுதாயத் தலைவா்கள், பயனாளிகளைச் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் 2 மணிக்கு முன்பு வந்துசேர வேண்டும். தோ்தல் தேதி அறிவிப்பில் கூட காங்கிரஸ், திமுகவினா் விமா்சனம் செய்கின்றனா். தோ்தல் தேதி தெரிந்ததால்தான் பிரதமா் தமிழகத்துக்கு வருவதாக சொல்கிறாா்கள். தோ்தல் ஆணையத்தின் மீது அவா்கள் பழி போடுவதை தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொள்வதாக பாா்க்கிறோம். இந்தத் தோ்தல் அடுத்த பிரதமராக யாா் வரவேண்டும் என்பதை முடிவு செய்யும் தோ்தல். தொகுதிப் பங்கீடு, வேட்பாளா் தோ்வு ஆகியவை இரண்டு மூன்று நாள்களில் நிறைவுபெறும். பிரம்மாண்டமான கூட்டணியை உருவாக்கி வருகிறோம். சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பிரதமா் மோடியை தரக்குறைவாக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளாா். அவ்வாறு பிரதமா் மோடியை விமா்சிப்பவா்களுக்கு தக்க பதிலடி தருவோம் என்றாா்.