கோவை அருகே ஆம்புலன்ஸ் - கார் மோதி விபத்து!
கோவை அருகே ஆம்புலன்ஸ் - கார் மோதி விபத்துக்குள்ளானது பற்றி...
கோவை விபத்து: கோவை மாவட்டம் மதுக்கரை அருகே ஆம்புலன்ஸும் காரும் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.
கோவை மருத்துவமனையில் இறந்தவரின் சடலத்தை கேரளத்துக்குச் சென்று ஒப்படைத்துவிட்டு மீண்டும் கோவையை நோக்கி இன்று காலை ஆம்புலன்ஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அதில், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் இருந்தனர்.
மதுக்கரை அருகே போடிநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே ஆம்புலன்ஸ் வந்துகொண்டிருந்தபோது, கேரளத்தை நோக்கிச் சென்ற காருடன் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சாலையோரம் ஆம்புலன்ஸ் கவிழ்ந்த நிலையில், கார் அப்பளம்போல் நொறுங்கியது. இதில், ஆம்புலன்ஸில் பயணித்த இருவரும், காரில் இருந்த இருவரும் காயமடைந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து, மதுக்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.