மத்திய அரசு வழங்கும் மெளலானா ஆசாத் கல்வி உதவித் தொகை பெற விரும்பும் சிறுபான்மையினத்தை சேர்ந்த 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவிகள் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசு, மெளலானா ஆசாத் கல்வி உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2017-18-ஆம் கல்வி ஆண்டில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவிகளுக்கு மத்திய அரசின் மெளலானா ஆசாத் அமைப்பின் மூலமாக கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
9 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 10,000 வழங்கப்படுகிறது. 11,12-ஆம் வகுப்பு மாணவர்களகுக்கு ஆண்டுக்கு ரூ. 12,000 வழங்கப்படுகிறது. இந்தத் தொகை இரண்டு தவணைகளில் மாணவிகளின் வங்கிக் கணக்கில் நேரடிப் பயன் மாற்று முறையில் செலுத்தப்படும்.
இக்கல்வித் தொகை சேர்க்கை, கற்பிக்கும் கட்டணம், புத்தகங்கள், எழுது பொருள்கள் மற்றும் உண்டி உறையுள் கட்டணங்களுக்காக வழங்கப்படுகிறது.
இக்கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்கு சிறுபான்மையின மாணவிகள் 9 முதல் 11-ஆம் வகுப்பு வரை பயில்பவர்கள் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களும், 12-ஆம் வகுப்பு வரை பயில்பவர்கள் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களும் அல்லது அதற்கு இணையான கிரேடு மதிப்பெண்களும் முந்தைய வகுப்புகளில் பெற்றிருக்கவேண்டும்.
இக்கல்வி உதவித் தொகை பெற விரும்பும் மாணவிகள் ww.maef.nic.in எனும் இணைதள முகவரியில் மட்டுமே அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், ஆன்லைனில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கப்பட்ட அனைத்துச் சான்று ஆவணங்களுடன் பள்ளித் தலைமையாசிரியர், முதல்வர் சான்றளிக்கப்பட்ட கையொப்பத்துடன் அனைத்து ஆவணங்களையும் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் Maulana Azad Education Foundation, Maulana Azad Campus, Chelmsford Road, Opposite New Delhi Railway Reservation Centre, New Delhi- 110055 என்ற முகவரிக்கு கல்வி நிறுவனங்கள் அனுப்பிவைக்க வேண்டும்.
பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியரால் சான்றளிக்கப்பட்ட மாணவர் புகைப்படம் இணைக்க வேண்டும். பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியரால் சரிபார்க்கப்பட்ட படிவத்தில் சான்றொப்பம் பெற்றிருத்தல்வேண்டும்.
சுய சான்றொப்பத்துடன் கூடிய முந்தைய வகுப்பின் மதிப்பெண் சான்றிதழ், வட்டாட்சியரிடமிருந்து பெற்ற ஆண்டு வருமானச் சான்றிதழ், சிறுபான்மையினர் என்பதற்கான சுய உறுதிமொழிப் படிவம், வங்கிக் கணக்கு எண், FS Code, MICR Code ஆகிய விவரங்கள் அடங்கிய வங்கிக் கணக்குப் புத்தகம் நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றையும் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.