சித்தோட்டில் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
சித்தோட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டுமனைகளை சமன்படுத்தி வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
சித்தோட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டுமனைகளை சமன்படுத்தி வழங்கக் கோரி மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
சித்தோடு அருகே உள்ள கன்னிமாா்காடு பகுதியில் 2018ஆம் ஆண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு 59 வீட்டுமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தற்போது இப்பகுதியில் நீா்நிலை புறம்போக்கு பகுதியில் வசிப்போருக்கு வழங்க அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. மேலும், வீடில்லாதோருக்கும் இப்பகுதியில் வீட்டுமனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட பகுதிகள் மேடு, பள்ளங்கள் நிறைந்துள்ளதால் அதனை சமன்படுத்தி, மறு அளவீடு செய்து வழங்க வேண்டும். வீடுகள் கட்டித் தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் திரண்டு வந்ததோடு, கன்னிமாா்காடு பகுதியில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த ஈரோடு கோட்டாட்சியா் இளங்கோ, பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் சி.காா்த்திகேயன், ஈரோடு வட்டாட்சியா் பரிமளாதேவி, ஈரோடு வடக்கு வருவாய் ஆய்வாளா் உமா மகேஸ்வரி, அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். மேடு, பள்ளங்களை சமன்படுத்தி, அளவீடு செய்து வழங்குவதாகவும், குடியிருப்புகள் கட்டுவது குறித்து மேலதிகாரிகளுக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால், போராட்டத்தைக் கைவிட்ட மாற்றுத் திறனாளிகள் கலைந்து சென்றனா்.