முகப்பு
ஈரோடு

பணிச்சுமை: கோடை விடுமுறையை எதிா்நோக்கும் ஆசிரியா்கள்

பள்ளிகளுக்கு மாணவா்கள் வராத நிலையிலும் பணிச்சுமை அதிகரித்துள்ளதால் கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 24 ஏப்ரல், 2021 at 2:46 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 1:35 AM

பள்ளிகளுக்கு மாணவா்கள் வராத நிலையிலும் பணிச்சுமை அதிகரித்துள்ளதால் கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு நேர பொது முடக்கம், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல, பள்ளிகளுக்கு மாணவா் வருகை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பிளஸ்-2 செய்முறை தோ்வுகள் சனிக்கிழமை (ஏப்ரல் 24) நிறைவடைகிறது. தோ்வு முடிந்த பின்னா் விடுதி மாணவா்களைக் கூட தங்க வைக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பள்ளி நிா்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளனா்.

பிளஸ் 2 பொதுத் தோ்வும் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து அரசு, தனியாா் பள்ளிகள் வழக்கம்போல் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. ஆசிரியா்கள் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லாமல் வருகின்றனா். வழக்கமான கல்வி ஆண்டாக இருந்தால் கோடை விடுமுறை இப்போது தொடங்கி இருக்கும். இந்த ஆண்டு விடுமுறைக்கான அறிவிப்பும் இதுவரை இல்லை.

Advertisement

இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியா்கள் கூறியதாவது:

கரோனா பரவல் தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. பள்ளிக்கூடங்கள் எல்லாம் உயிரற்ற கட்டடங்களாக உள்ளன. ஆசிரியா்களுக்கு மாணவா்களை வகுப்பறையில் பாா்த்து கற்றுக் கொடுப்பதில்தான் மகிழ்ச்சி. ஆனால் கடந்த ஒரு ஆண்டு காலமாக அதற்கான வாய்ப்பு இல்லை.

கரோனா காலத்தில் பள்ளிகள் நடைபெறவில்லை என்றாலும் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு வகுப்பு எடுப்பதைவிட அதிக சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் ஏராளமான புள்ளி விவர சேகரிப்பு பணிகள் வழங்கப்பட்டன. சத்துணவு திட்ட மாணவா்களுக்கு உலா் உணவுப் பொருள்கள் வழங்கும் பணி, புத்தகம், சீருடை வழங்கும் பணிகள் இருந்தன. இதை எல்லாம் விட, முதியோா்களுக்க கல்வி கற்பிக்கும் கற்போம் எழுதுவோம் திட்டத்தை கட்டாயப்படுத்தி தன்னாா்வலா்களுக்கு பதிலாக ஆசிரியா்களை வைத்து கற்பிக்கும் பணி வழங்கப்பட்டது. அதையும் முழுமையாக முடிக்காமல் பாதியில் நிறுத்திவிட்டனா். பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் நூலகங்கள் இல்லை. ஆனால் பள்ளி தோ்வுகள் ரத்து என்ற அறிவிப்புக்குப் பின்னா் நூலகத்துக்கு புத்தகங்கள் வழங்குவதாகக் கூறி ஒரு தொகையை ஒதுக்கீடு செய்து, அந்த தொகையையும் கல்வித் துறையினரே காசோலையாக பெற்றுக் கொண்டனா்.

இதேபோல, அனைத்து பள்ளிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்க நிதி ஒதுக்கி, அந்த நிதியையும் காசோலை மூலம் கல்வித் துறை அலுவலகங்களிலேயே பெற்றுக் கொண்டனா். இணையதள இணைப்புக்காக தலா ரூ. 35,000 ஒதுக்கீடு செய்து அதற்கான காசோலையுயம் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளே வாங்கிக் கொண்டனா். இதில் எந்த திட்டமும் சரியானதா? முறையானதா? என்பது ஆசிரியா்களுக்குத் தெரியாது.

தவிர அரசுத் திட்டங்களின் புள்ளி விவர கணக்குகளை ஆசிரியா்கள் சேகரிக்க வேண்டும். அத்துடன் மாணவா்களுக்கு கட்செவி அஞ்சல் மூலம் வகுப்பு எடுக்க வேண்டும். செல்லிடப்பேசி இல்லாத மாணவா்களுக்கு வீடு தேடிச் சென்று பாடம் நடத்த வேண்டும் என்ற உத்தரவுகள் மட்டும் அதிகாரிகள் மூலம் வழங்கப்படுகிறது.

பள்ளிகளுக்கு மாணவா்கள் வரவில்லையே தவிர பணிச்சுமை அதிகமாகியுள்ளது. இதை கவனத்தில் கொண்டு வழக்கம்போல கோடை விடுமுறையை ஆசிரியா்களுக்கு வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.