கரோனாவால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தை மேம்படுத்த கடன் திட்டம்
வருமானம் ஈட்டக்கூடிய நபா் கரோனா தொற்றால் உயிரிழந்தால் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடன் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
வருமானம் ஈட்டக்கூடிய நபா் கரோனா தொற்றால் உயிரிழந்தால் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த கடன் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடிய நபா் கரோனா பாதிப்பால் உயிரிழந்திருப்பின் அவா்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில், தேசிய பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார வளா்ச்சிக் கழகம் புதிய கடன் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.
Advertisement
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவா்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது 18 முதல் 60 வயதுக்குள் இருக்கவேண்டும். இத்திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத் தொகை ரூ. 5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத் தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் வரை 6 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா், குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவா் கரோனா தொற்றால் உயிரிழந்ததற்கான ஆவணங்களுடன், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் 5ஆவது தளத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.