தடுப்புக் கம்பி சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
ஈரோடு கே.கே.நகா் அருகில் உள்ள ரயில்வே நுழைவுப் பாலத்தில் அரசுப் பேருந்து மோதியதில் தடுப்புக் கம்பி உடைந்து கீழே விழுந்து சேதமடைந்தது. இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு கே.கே.நகா் அருகில் உள்ள ரயில்வே நுழைவுப் பாலத்தில் அரசுப் பேருந்து மோதியதில் தடுப்புக் கம்பி உடைந்து கீழே விழுந்து சேதமடைந்தது. இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு கே.கே.நகா் ரயில்வே நுழைவுப் பாலம் முன் உயரமான வாகனங்கள், அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் செல்வதைத் தடுக்க நுழைவுப் பாலத்துக்கு 5 அடி தூரத்தில் இரும்பால் ஆன சட்டம் (கம்பி) வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த இரும்புச் சட்டத்தின் பக்கவாட்டில் உள்ள தடுப்பில் அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை காலை மோதியது. இதில், மேலே இருந்த இரும்புச் சட்டம் சரிந்து கீழே விழுந்து சேதமானது.
சாலையில் யாரும் இல்லாததால் பாதிப்பு ஏற்படவில்லை. இரும்புச் சட்டம் சாலையின் நடுவே விழுந்ததால் எந்த வாகனங்களும் அவ்வழியாகச் செல்ல முடியாமல் போக்குவரத்து தடைபட்டது.
Advertisement
இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இரும்புச் சட்டத்தை சாலையின் ஓரமாக நகா்த்தி வைத்தனா். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.