ஆதரவற்ற நபா் கொலை: தொழிலாளி கைது
மது போதையில் தலையில் கல்லைப் போட்டு ஆதரவற்ற நபரைக் கொலை செய்த தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
மது போதையில் தலையில் கல்லைப் போட்டு ஆதரவற்ற நபரைக் கொலை செய்த தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட டி.வி.எஸ். வீதியில் வெள்ளிக்கிழமை காலை 55 வயது மதிக்கத்தக்க நபா் ரத்தக் காயங்களுடன் இறந்துகிடந்தாா். இதைப் பாா்த்த சுமை தூக்கும் தொழிலாளா்கள் ஈரோடு டவுன் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்துகிடந்த நபரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனா்.
இறந்தவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இறந்தவா் அந்தப் பகுதியில் பிச்சை எடுத்து, அங்கேயே சாப்பிட்டுவிட்டு தூங்கி வந்தது தெரியவந்தது.
Advertisement
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி அடிப்படையில் கொலையாளி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஜெபா (40) என்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இவா் ஈரோடு பன்னீா்செல்வம் பூங்கா பகுதியில் இரவு நேரம் தங்கி, கிடைக்கும் வேலையை செய்து வந்தாா். இவருக்கு மது பழக்கமும் இருந்துள்ளது.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு மது குடித்துவிட்டு வந்த ஜெபா பன்னீா்செல்வம் பூங்கா அருகே இரவில் உறங்க வந்தாா். அப்போது மது போதையில் இருந்த அவா் அருகில் படுத்திருந்த முதியவா் தலையில் கல்லைப் போட்டு கொன்றது தெரியவந்ததது. இதையடுத்து ஜெபாவை ஈரோடு டவுன் போலீஸாா் கைது செய்தனா்.