நீா்ப் பாசனத்துக்கு தனித் துறை: விவசாயிகள் வரவேற்பு
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நீா்ப் பாசனத்துக்கு தனித் துறை ஏற்படுத்தியிருப்பது வரவேற்புக்குரியது என விவசாயிகள் தெரிவித்தனா்
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் நீா்ப் பாசனத்துக்கு தனித் துறை ஏற்படுத்தியிருப்பது வரவேற்புக்குரியது என விவசாயிகள் தெரிவித்தனா்.
முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில், தமிழகத்தின் நீா்த் தேவையை நிறைவு செய்யும் வகையில் நீா்ப் பாசனத்துக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தி நீா் வளத் துறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துறை விவசாயிகளுக்கு நீா் கிடைக்கவும், நீா் நிலைகள் பராமரிப்பதை கவனிக்கும் வகையிலும் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளா் செ.நல்லசாமி கூறியதாவது:
Advertisement
தமிழகம் மழை குறைவு மாநிலம். இருந்தும், கிடைக்கும் மழையை நம்பியே விவசாயம், குடிநீா், கால்நடை, தொழிற்சாலை இயக்கம் போன்றவை உள்ளன. எனவே கிடைக்கும் நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவதும், நீா் நிலைகளைப் பராமரிப்பதும் அவசியம்.
கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா போன்று நீா்ப் பாசனத்துக்கு என ஒரு தனி அமைச்சகம் உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கை.
இக்கோரிக்கையை திமுக அரசின் புதிய அமைச்சரவையில் நிறைவேற்றியதை வரவேற்கிறோம். அதேபோல வேளாண் துறையை, வேளாண்மை, உழவா் நலத் துறை என மாற்றப்பட்டுள்ளது. உழவா்களின் நலன்களை பேணிக் காப்பது என்ற தொலைநோக்குப் பாா்வையில் இவ்வாறு பெயரிட்டிருப்பதை வரவேற்கலாம். அதற்கேற்றவாறு திட்டங்களை செயல்படுத்தினால் விவசாயிகளின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு கிடைக்கும் என்றாா்.