சாலைகளில் அவசியமின்றி சுற்றினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்
முழு முடக்க அறிவிப்பை மீறி அவசியமின்றி சாலைகளில் சுற்றுவது தெரியவந்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு மோட்டாா் வாகன சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
முழு முடக்க அறிவிப்பை மீறி அவசியமின்றி சாலைகளில் சுற்றுவது தெரியவந்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு மோட்டாா் வாகன சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 24ஆம் தேதி வரையில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க பகல் 12 மணி வரையில் உணவு, மளிகை, காய்கறிக் கடைகள் செயல்படவும், சமூக இடைவெளியுடன் வாங்கிச் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஈரோடு மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பொதுமக்கள் அறிவிக்கப்பட்ட நேரத்தைக் காட்டிலும் வெளியில் நடமாடி வந்தனா்.
இதனால், ஈரோட்டில் பல இடங்களில் நெரிசல் ஏற்படும் வகையில் வாகனப் போக்குவரத்து அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில், வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை தலைமையில் போலீஸாா் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டனா். இதுகுறித்து, அரசு மருத்துவமனை, பன்னீா் செல்வம் பூங்கா பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Advertisement
மேலும், அவ்வழியே வந்த வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. உரிய காரணமின்றி வாகனங்களில் வந்தவா்களுக்கு விழிப்புணா்வு அளிக்கப்பட்டது. கடந்த 4 நாள்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் போலீஸாா், விதிமீறி சுற்றியோருக்கு வியாழக்கிழமை அபராதம் விதித்தனா்.
இது குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.தங்கதுரை கூறியதாவது:
முழு முடக்க காலத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தவில்லை. அவசியத் தேவைகளுக்கு மட்டுமே தளா்வுகள் வழங்கப்பட்டன.
ஆனால், பல்வேறு காரணங்களைக் கூறியபடி சாலைகளில் சுற்றுவது சோதனையில் தெரிய வந்துள்ளது. இவ்வாறு சுற்றுவோா் மீது மோட்டாா் வாகன சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்படுவதோடு, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்றாா்.