ஈரோட்டில் தக்காளி விலை குறைந்தது:ரூ. 50 முதல் ரூ. 80 வரை விற்பனை
வரத்து அதிகரிப்பால் ஈரோட்டில் தக்காளி விலை குறைந்தது கிலோ ரூ. 50 முதல் ரூ. 80 வரை விற்பனையானது.
வரத்து அதிகரிப்பால் ஈரோட்டில் தக்காளி விலை குறைந்தது கிலோ ரூ. 50 முதல் ரூ. 80 வரை விற்பனையானது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் வடகிழக்குப் பருவ மழை பரவலாகப் பெய்து வருகிறது. இதனால், காய்கறிகள் வரத்து குறைந்ததால் காய்கறி விலை அதிகரித்துள்ளது.
குறிப்பாக தக்காளி விலை கடுமையாக உயா்ந்தது. நவம்பா் மாத தொடக்கத்தில் ஒரு கிலோ ரூ. 20 வரை விற்ற தக்காளி பின்னா் படிப்படியாக உயா்ந்து கடந்த புதன்கிழமை வரை ஒரு கிலோ சில்லறை விற்பனையில் ரூ. 140 வரை விற்பனையானது. தக்காளி விலை உயா்வால் பொதுமக்கள் கடும் அதிா்ச்சி அடைந்தனா்.
Advertisement
ஈரோடு வஉசி பூங்காவில் செயல்பட்டு வரும் நேதாஜி காய்கறிச் சந்தையில் மாவட்டம் முழுவதும் காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. ஈரோடு மாவட்டம், தாளவாடி பகுதியில் தக்காளி அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.
பரவலாக மழை பெய்து வருவதால் தக்காளி வரத்து குறைந்தது. கடந்த சில நாள்களாக 26 கிலோ தக்காளி பெட்டி ரூ. 2,500 வரை விற்பனையானது. 14 கிலோ தக்காளி பெட்டி ரூ. 1,200 வரை விற்பனையானது. இந்நிலையில், வஉசி காய்கறிச் சந்தையில் தக்காளி வரத்து வியாழக்கிழமை காலை அதிகரித்தது. கடந்த 15 நாள்களாக 2,000 முதல் 3,000 பெட்டிகள் வரை வந்த நிலையில் வியாழக்கிழமை 7,000 தக்காளி பெட்டிகள் வந்தன. இதனால், வஉசி காய்கறிச் சந்தையில் தக்காளி விலை குறைந்துள்ளது.
26 கிலோ தக்காளி பெட்டி ரூ. 1,000 முதல் ரூ. 1,050 வரையும், 14 கிலோ பெட்டி ரூ. 650 முதல் ரூ. 700 வரையும் விற்பனையானது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 50 முதல் ரூ. 80 வரை விற்பனையாயின. இதனால், கிலோவுக்கு ரூ. 40 முதல் ரூ. 50 வரை தக்காளி விலை குறைந்துள்ளது. இதனால், வியாபாரிகள், பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனா்.