நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க ஆட்சியா் உத்தரவு
ஈரோட்டில் இருந்து திண்டல் வழியாக வள்ளிபுரத்தான்பாளையம் வரை செல்லும் அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
ஈரோட்டில் இருந்து திண்டல் வழியாக வள்ளிபுரத்தான்பாளையம் வரை செல்லும் அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து திண்டல் வழியாக வள்ளிபுரத்தான்பாளையத்துக்கு தினமும் காலை 8.30 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் அரசு நகரப் பேருந்து (எண் 2 பி) இயக்கப்பட்டு வந்தது. கரோனா பொது முடக்கத்தால் இந்தப் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. தளா்வுக்குப் பின் அவ்வப்போது இயக்கப்பட்ட நிலையில் தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டதால் அப்பகுதியில் இருந்து வரும் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் 3 கி.மீ. தூரம் நடந்து வந்து மேட்டுக்கடை பிரதான சாலையில் இருந்து பேருந்தில் ஏறிச் சென்று வந்தனா்.
இதில், பல்வேறு சிரமம் ஏற்பட்டதால் சில குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதைப் பெற்றோா் நிறுத்திவிட்டனா். இதுகுறித்து அப்பகுதியினா் மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணியிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா். இதையடுத்து ஆட்சியா் உடனடியாக அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு, பள்ளிக் குழந்தைகள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
Advertisement
இதுகுறித்து ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:
பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது எனது கவனத்துக்கு வரவில்லை. தற்போது தெரியவந்ததும் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு வழக்கம்போல பேருந்துகளை இயக்கவும், பள்ளிக் குழந்தைகள் பாதிக்காத வகையில் உரிய நேரத்தில் இயக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.