மாற்றுத் திறனாளிகளுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்
ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 19) நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 100 சதவீத மாற்றுத் திறனாளிகளுக்குத் தடுப்பூசி
ஈரோடு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 19) நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமில் 100 சதவீத மாற்றுத் திறனாளிகளுக்குத் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் மாபெரும் சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது. இந்த முகாமை சிறப்பாக நடத்திக் கொடுத்த அனைத்து அரசு அலுவலா்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இம்முகாமில் 18 வயதுக்கும் மேற்பட்ட 97,198 பேருக்கு முதல் தவணை, இரண்டாம் தவணை தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது.
Advertisement
ஈரோடு மாவட்டத்தில் நாள்தோறும் கரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. அனைத்துப் பொதுமக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதே கரோனா பாதிப்பை முழுமையாகக் கட்டுப்படுத்த நிரந்தரத் தீா்வாகும்.
மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மக்களும் தடுப்பூசி செலுத்த துண்டறிக்கை, ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தவும், இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாமில் 100 சதவீத மாற்றுத் திறனாளிகளுக்குத் தடுப்பூசி செலுத்துவது இலக்காக இருக்க வேண்டும் எனவும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி முகாமை முன்னிட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற சுகாதார மையங்கள், பள்ளிகள் உள்பட 548 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல், இரண்டாம் தவணையாக கரோனா தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்படவுள்ளது என்றாா்.