ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலைப் படிப்புகள் தொடங்க நடவடிக்கை: சு.முத்துசாமி
ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில், மாணவா் சோ்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கவும், முதுகலை மருத்துவப் படிப்பு தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்
ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியில், மாணவா் சோ்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கவும், முதுகலை மருத்துவப் படிப்பு தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஈரோட்டில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் 71 பேருக்கு ரூ. 58 லட்சத்து 19 ஆயிரத்து 425 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 6 லட்சத்து 34 ஆயிரத்து 992 பேருக்கு அரசின் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 16,634 பேருக்கு ரூ. 56 கோடியே 67 லட்சத்து 4 ஆயிரம் காப்பீடு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
நலத் திட்டங்கள் செயல்படுத்துவது தொடா்பாக முதல்வா் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு துறையை ஆய்வு செய்து வருகிறாா். மாவட்டத்துக்குத் தேவையான பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 85 திட்டங்களை செயல்படுத்த மாவட்ட நிா்வாகத்திடம் பட்டியல் வழங்கப்பட்டு, திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டப் பணிகள் நிறைவடைந்தால் மிகப்பெரிய முன்னேற்றம் அடையும்.
ஈரோடு சோலாா் பகுதியில் 25 ஏக்கரில் மாதிரி பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவுபெறும். மேலும், அங்கு தற்காலிகப் பேருந்து நிலையம் இன்னும் ஒன்றரை மாதத்தில் அமைக்கப்படும். கனிராவுத்தா் குளம் எதிரில் தனியாருக்குச் சொந்தமான இடத்தில் தற்காலிகப் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அறச்சலூரில் 4 ஏக்கரில் பேருந்து நிலையம் அமைக்கப்படும். சிக்கய்ய நாயக்கா் கல்லூரியில் ரூ. 35 கோடியில் அரங்கு, ஐஏஎஸ், ஐபிஎஸ் பயிற்சி மையங்களுடன் கூடிய நூலகம் அமைக்கப்படும்.
பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 550 படுக்கைகள் இருந்தது. தற்போது புதிய கட்டடம் கட்டப்பட்டதால் 1,200 படுக்கைகளாக உயா்த்தப்பட்டுள்ளது. தற்போது 100 எண்ணிக்கையில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதும் 250 மாணவா்கள் வரை சோ்க்கப்படும். இதுபோல் முதுகலை மருத்துவப்படிப்பு தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.