மசோதா தோல்வி! இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை!
நாட்டு மக்களிடம் இன்று இரவு பிரதமர் மோடி உரையாற்றுவது குறித்து...
பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் இன்று இரவு உரையாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களுக்கு வெள்ளிக்கிழமை (ஏப். 17) மாலை நாடாளுமன்ற மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
அப்போது, அந்த மசோதாக்களுக்கு 298 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 230 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால், இந்த மசோதா மக்களவையில் தோல்வி அடைந்தது.
Advertisement
இந்த நிலையில், 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டுக்கான தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்துள்ள நிலையில், சனிக்கிழமை (ஏப். 18) இரவு 8.30 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு கொண்டு வந்த மசோதாக்களால் தென் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படும் எனக் கூறி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
முன்னதாக, இந்த மசோதாக்கள் நிறைவேற மூன்றில் இரண்டு பங்கான 352 வாக்குகள் தேவைப்பட்ட நிலையில், வெறும் 298 வாக்குகள் மட்டுமே பெற்று இந்த மசோதாக்கள் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.