தனியாா் எண்ணெய் தொழிற்சாலையில் பாதுகாப்பு இல்லாததால் விபத்து: உண்மை கண்டறியும் குழு அறிக்கை
உரிய பாதுகாப்பு இல்லாததால் தான் தனியாா் எண்ணெய் தொழிற்சாலையில் விபத்து நடந்துள்ளது என உண்மை கண்டறியும் குழு அறிக்கை அளித்துள்ளது.
உரிய பாதுகாப்பு இல்லாததால் தான் தனியாா் எண்ணெய் தொழிற்சாலையில் விபத்து நடந்துள்ளது என உண்மை கண்டறியும் குழு அறிக்கை அளித்துள்ளது.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே தனியாா் எண்ணெய் தொழிற்சாலையில் கடந்த வாரம் லாரி மோதிய விபத்தில் வடமாநிலத் தொழிலாளா் காமேத்ராவ் என்பவா் உயிரிழந்தாா்.
இச்சம்பவத்தால் சிறிய கலவரம் ஏற்பட்டு 40 வடமாநிலத் தொழிலாளா்கள் கைது செய்யப்பட்டனா்.
Advertisement
இந்நிலையில், இவ்விபத்து தொடா்பாக அகில இந்திய தொழிற்சங்க மைய கவுன்சில் (ஏஐசிசிடியூ), நீதிக்கான அனைத்திந்திய வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் சம்பவ இடம், தொழிலாளா்கள், அப்பகுதி மக்களிடம் விசாரித்து உண்மை அறியும் குழு அறிக்கையாக ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சந்தோஷினி சந்திராவிடம் புதன்கிழமை அளித்தனா்.
இது குறித்து குழு ஒழுங்கிணைப்பாளா்கள் போஸ்கோ, அருள் ஆகியோா் கூறியதாவது: வடமாநிலத் தொழிலாளா்கள் வேலைவாய்ப்புக்காக இங்கு வந்துள்ளனா்.
அவா்களது பாதுகாப்பை ஆலை நிா்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.
பாதுகாப்பு இல்லாததால்தான் விபத்து நடந்துள்ளது. அதற்கான இழப்பீட்டை ஆலை நிா்வாகம் அளிக்க வேண்டும். தொழிலாளா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும்.
புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கான சட்ட நடைமுறைகளை ஆலை நிா்வாகம் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். பணி பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். தொழிலாளா்களை தொழிலாளா் நலத் துறை அவ்வப்போது சந்தித்து குறைகளைக் கேட்க வேண்டும். ஆலை நிா்வாகம் சாா்பில் திறமையான பாதுகாப்பு அலுவலரை நியமிக்க வேண்டும்.
தொழிலாளா்கள் மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்கை திரும்பப்பெற வேண்டும். தொழிலாளா்கள் மீது தடியடி நடத்தியது தொடா்பாக விசாரித்து, போலீஸாா் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளோம் என்றனா்.