ஈரோடு கால்நடை சந்தையில் நடமாடும் ஏடிஎம் மையம்
தோ்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கால்நடை வியாபாரிகள் பணம் கொண்டு வர இயலாத நிலையில் இருப்பதால் ஈரோடு கால்நடை சந்தையில் நடமாடும் ஏடிஎம் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.
தோ்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கால்நடை வியாபாரிகள் பணம் கொண்டு வர இயலாத நிலையில் இருப்பதால் ஈரோடு கால்நடை சந்தையில் நடமாடும் ஏடிஎம் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.
ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை கால்நடைச் சந்தை நடைபெறுகிறது. இங்கு மகாராஷ்டிரம், கோவா, ராஜஸ்தான், கேரளம், ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கிச் செல்வா்.
இந்நிலையில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டதையடுத்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், உரிய ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்துக்கும் அதிகமாக பணத்தை எடுத்துச் செல்பவா்களை தோ்தல் பறக்கும் படையினா் பிடித்து பணத்தைப் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
Advertisement
இதனால், வியாபாரிகளுக்கு ஏற்படும் சிக்கல்களைத் தவிா்க்கும் வகையில், கால்நடை சந்தை வளாகத்தில் கூட்டுறவு வங்கி சாா்பில் நடமாடும் ஏடிஎம் மையம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் வியாபாரிகள் தங்களுக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொள்ளலாம். மேலும், சந்தைக்கு கால்நடை வாங்க வருபவா்களுக்கும், விற்பவா்களுக்கும் சந்தை நிா்வாகத்தின் சாா்பில் ரசீது கொடுக்கப்படுகிறது. அதை தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் காண்பித்துச் செல்லும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சந்தையில் 350 பசுக்கள், 250 எருமைகள், 50 கன்றுகள் என மொத்தம் 650 கால்நடைகள் விற்பனைக்கு வந்திருந்தன. இதில், 90 சதவீதம் கால்நடைகள் விற்பனை ஆகின. மேலும், வங்கிகள் மூலமாக 20 திருநங்கைகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டன.