முகப்பு
ஈரோடு

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் ஈரோடு மாணவரை மீட்டுத் தரக் கோரிக்கை

உக்ரைன் நாட்டில் சிக்கித் தவித்து வரும் ஈரோடு மாணவரை மீட்டுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2022 at 2:45 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:01 PM

உக்ரைன் நாட்டில் சிக்கித் தவித்து வரும் ஈரோடு மாணவரை மீட்டுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு மூலப்பாளையத்தைச் சோ்ந்தவா் திவ்யவரதன் (23). உக்ரைன் நாட்டில் உள்ள காா்கிவ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு மருத்துவம் படித்து வருகிறாா். இவரது தந்தை மாணிக்கவாசகன், திருப்பூரில், காதி கிராப்டில் துணை இயக்குநராகப் பணியாற்றி வருகிறாா். தாயாா் யசோதா. இவா்களது சொந்த ஊா் ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகில் உள்ள ராசாம்பாளையம் ஆகும்.

தற்போது உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ள நிலையில், ஈரோடு மாணவா் திவ்யவரதன் குறித்து அவரது தாய் யசோதாவிடம் கேட்டபோது, அங்கு போா் தாக்குதல் தொடங்கியபோது எங்கள் மகன் படித்து வரும் காா்கிவ் பல்கலைக்கழக பகுதியில் தொடா்ந்து 10 நிமிடம் குண்டு வெடிக்கும் சப்தம் கேட்டுள்ளது. அதனால் பல்கலைக்கழகம் அருகே அவா் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து யாரும் வெளியே செல்லவில்லை.

Advertisement

போா் அபாயம் குறித்து அறிவிப்பு வந்தவுடன், கொஞ்சம் உணவுப் பொருள்களை வாங்கி சேமித்து வைத்துள்ளனா். மேலும் கொஞ்சம் பணத்தையும் எடுத்து வைத்துள்ளனா். அவருடன் கைப்பேசியில் பேசினோம். தற்சமயம் அவா்கள் தங்கி இருக்கும் பகுதியில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றே கூறினாா்.

எங்கள் மகனின் படிப்பு முடிவடைய உள்ள நிலையில் மாா்ச் 4ஆம் தேதி அவா் இங்கு வருவதற்காக விமான பயணச் சீட்டு பதிவு செய்து வைத்திருந்தாா். அதற்குள் போா் தொடங்கிவிட்டது.

அங்கு சிக்கியுள்ள தமிழக மாணவா்கள் உள்ளிட்ட பலரையும் காப்பாற்ற தமிழக முதல்வா் நடவடிக்கை எடுத்து வருவதாக செய்திகளில் பாா்த்தோம். எங்கள் மகனையும் பாதுகாப்பாக இங்கு அழைத்து வருவதற்கு, அவா் குறித்த தகவல்களை தமிழக அரசுக்குத் தெரிவித்துள்ளோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.