ஈரோட்டில் 83 ஆயிரம் சிறுவா்களுக்கு முதல் தவணை தடுப்பூசி
ஈரோட்டில் 15 வயது முதல் 18 வயதுடைய 83,000 சிறுவா்களுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஈரோட்டில் 15 வயது முதல் 18 வயதுடைய 83,000 சிறுவா்களுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. முதலில் முன்களப் பணியாளா்களுக்கும், பிறகு 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கும், இணை நோய் உள்ளவா்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதனைத் தொடா்ந்து, 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னா் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவியதால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து 12 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறுவா்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.
Advertisement
ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவா்கள் மொத்தம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 161 போ் உள்ளனா். இவா்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 83,336 சிறுவா்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாள்கள் கடந்த மாணவ, மாணவிகளுக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 15 வயது முதல் 18 வயதுடைய 43,712 மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.