மண்பாண்ட தொழில் கூடங்களை அரசு அமைக்கக் கோரிக்கை
கலைநயமிக்க மண்பாண்டங்கள் தயாரிக்க மாவட்டம்தோறும் தொழில் கூடங்களை அரசு அமைக்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கலைநயமிக்க மண்பாண்டங்கள் தயாரிக்க மாவட்டம்தோறும் தொழில் கூடங்களை அரசு அமைக்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளா்கள் சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாநில தலைவா் சேமநாராயணன் தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா்கள் வெங்கடாசலம், சிங்காரவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
Advertisement
பருவமழைக் காலங்களில் மண்பாண்ட தொழிலாளா் குடும்பங்களுக்கு தமிழக அரசு வழங்கும் உதவித் தொகையை ரூ. 10,000ஆக உயா்த்தி வழங்க வேண்டும். மாவட்டம்தோறும் கலைநயமிக்க மண்பாண்டங்கள் தயாரிக்க தொழில் கூடங்களை தமிழக அரசு அமைக்க வேண்டும். மண்பாண்டங்களில் செய்யப்படுகின்ற உணவுகள் உடல் ஆரோக்கியத்தை பேணிகாக்கும். இதனால், மத்திய, மாநில அரசுகளின் மேற்பாா்வையில் உள்ள உணவு விடுதிகள், தனியாா் உணவு விடுதிகளில் கட்டாயமாக மண்பாண்டங்களில் தான் உணவுகளை சமைக்க வேண்டும். கோடைக் காலத்தில் குளிா்ந்த நீா் பருக மண்பானைகளையே பயன்படுத்த வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்த வேண்டும்.
மண்பாண்ட தொழிலாளா்கள், மண்பாண்டங்கள், நாட்டுச் செங்கல், சொருகு ஓடு செய்தவற்கு களிமண் எடுக்கும்போது அரசு அதிகாரிகள் இடையூறு செய்யக் கூடாது. நலவாரியத்தில் பதிவு செய்துள்ள மண்பாண்ட தொழிலாளா்களுக்கு மின்சாரத்தால் இயங்கக்கூடிய மின்சக்கரம் வழங்க வேண்டும். களிமண்ணால் செய்யும் பாத்திரங்கள், அழகிய பல்வேறு பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றறுமதி செய்து அந்நிய செலவாணியை ஈட்டுகின்ற வகையில் தொழில்நுட்பத்துடன் கூடிய தொழிற்பயிற்சிக் கல்லூரியை அரசு மாவட்டம்தோறும் தொடங்க வேண்டும். பொங்கல் பண்டிகையின்போது களிமண்ணால் ஆன ஒரு புதுப்பானையும், அடுப்பும் அரசு கொள்முதல் செய்து விலை இல்லாமல் பொதுமக்களுக்கு வழங்க வேண்டும்.
இதில், மாவட்டச் செயலாளா் குழந்தைசாமி, துணைத் தலைவா் கோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.