குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை அறிந்துகொள்ள சிறப்பு முகாம்
குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை அறிந்துகொள்வதற்கான சிறப்பு முகாம் மாா்ச் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.
குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை அறிந்துகொள்வதற்கான சிறப்பு முகாம் மாா்ச் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ஹெச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம், போஷன் அபியான் திட்டத்தின்கீழ் ஆரோக்கியமான குழந்தைகளைக் கண்டறிய சிறப்பு முகாம் மாா்ச் 21ஆம் தேதி தொடங்கியது. இந்த முகாம் மாா்ச் 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
Advertisement
அதன்படி, இந்த முகாமில் பிறந்த குழந்தை முதல் 6 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை அறிய அவா்களின் எடை, உயரம் அளவீடு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலமாக குழந்தையின் ஆரோக்கிய வளா்ச்சியைத் தெரிந்துகொள்ள முடியும். இதற்காக ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி போன்ற அனைத்துப் பகுதிகளில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலமாக மாா்ச் 21ஆம் தேதி முதல் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் மாா்ச் 27ஆம் தேதி வரை நடைபெறும்.
அங்கன்வாடி பணியாளா்கள், மாணவா்கள், ஆசிரியா்கள், தன்னாா்வலா்கள், அரசு சாரா நிறுவனப் பிரதிநிதிகள் மூலமாக அங்கன்வாடி மையங்கள், மருத்துவமனைகள், வீடுகள், சமுதாயக்கூடம், மழலையா் பள்ளிகள் ஆகிய இடங்களில் பிறந்தது முதல் 6 வயதுக்கு உள்பட்ட அனைத்துக் குழந்தைகளின் எடை மற்றும் உயரம் அளவீடு செய்யப்படும்.
இதனால், இம்முகாமைப் பயன்படுத்தி பொதுமக்கள் குழந்தைகளின் எடை, உயரம் ஆகியவற்றை அளவீடு செய்து குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.