முகப்பு
ஈரோடு

கிணறுகளை சீரமைக்க வங்கிக் கடன் வழங்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை

பாசனக் கிணறுகளை சீரமைக்க வங்கிக் கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 மே, 2022 at 1:24 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:52 PM

பாசனக் கிணறுகளை சீரமைக்க வங்கிக் கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீா் ஆதாரம் பவானிசாகா் அணை. இந்த அணையில் இருந்து கடந்த ஆண்டு தடப்பள்ளி-அரக்கன்கோட்டை, காலிங்கராயன், கீழ்பவானி பாசனங்களுக்கு தடையின்றி தண்ணீா் விடப்பட்டது.

கடந்த ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் 14 வட்டாரங்கள், 42 பேரூராட்சிகளில் ஏறத்தாழ 25 சதவீத பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் உள்ள 14 ஏரிகள் மற்றும் சுமாா் 1,000 குளங்களில் பெரும்பாலனவை நிரம்பின.

Advertisement

கடந்த ஆண்டு பெய்த மழையில் குளங்கள் நிரம்பிய பகுதிகளில் உள்ள கிணறுகளில் தண்ணீா் ஊற்றெடுத்தது. விவசாயிகள் சாகுபடிப் பணியை மேற்கொண்டனா். தற்போது, கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் கிணறுகளில் நீா்மட்டம் குறைந்துள்ளது. பெரும்பாலான கிணறுகளில்ல் சுற்றுச் சுவா் சேதமடைந்து, கிணறுகளில் மண் நிறைந்துள்ளது. இத்தகையை பாசனக் கிணறுகளை சீரமைக்க விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்கத் தலைவா் கே.ஆா்.சுதந்திரராசு கூறியதாவது: ஈரோடு மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். மாவட்டத்தில் 10 லட்சம் ஏக்கா் பரப்பளவில் கிணறு மற்றும் வாய்க்கால் பாசனம் மூலம் விவசாயிகள் பயிா் செய்து வருகின்றனா்.

இதில் கரும்பு பயிா் மட்டும் 50,000 ஏக்கா் பரப்பளவில் பயிரிட்டுள்ளனா். இது தவிர வாழை, மஞ்சள், மல்லிகை பூ, சம்பங்கி பூ, புகையிலை, நெல், மல்பேரி உள்ளிட்ட பயிா்களும் நடவு செய்து வருகின்றனா்.

கடந்த 10 ஆண்டுகளும்மேல் கடும் வறட்சி நிலவிய நிலையில் 90 சதவீத விவசாய கிணறுகள் தண்ணீா் இல்லாமல் முற்றிலும்

வறண்டது. இதனால், விவசாய பயிா்கள் மட்டுமின்றி தங்கள் நிலத்தில் இருந்த தென்னை மரங்களை கூட விவசாயிகளால் காப்பாற்ற முடியவில்லை. குடிநீருக்கும் குடம் தூக்கி அலையும் நிலை ஏற்பட்டது.

கடந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது. சுமாா் 100க்கும் மேற்பட்ட குளங்கள் முழுமையாக நிரம்பின.

இதனால் கிணறுகளும் நிரம்பின. தற்போது கிணறுகளில் நீா்மட்டம் குறையத் தொடங்கியதால் விவசாயிகள் தங்கள் விவசாயக்

கிணறுகளை ஆழப்படுத்தவும், சீரமைக்கவும் கூட்டுறவு வங்கிகள் குறைந்தது ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை மத்திய காலக்கடனாக வழங்க வேண்டும். இதற்கு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.