ஈரோட்டில் தக்காளி விலை சரிவு: கிலோ ரூ.60க்கு விற்பனை
கா்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து தக்காளி வருவதால் ஈரோட்டில் கிலோ ரூ.100க்கு விற்பனையான தக்காளி தற்போது ரூ.60 ஆக விலை சரிந்துள்ளது.
கா்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து தக்காளி வருவதால் ஈரோட்டில் கிலோ ரூ.100க்கு விற்பனையான தக்காளி தற்போது ரூ.60 ஆக விலை சரிந்துள்ளது.
ஈரோடு வஉசி பூங்கா வளாகத்தில் உள்ள நேதாஜி காய்கறி சந்தைக்கு தாளவாடி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஓசூா், கா்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து தக்காளி வரும். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தமிழகம், கா்நாடகத்தில் பரவலாக மழை பெய்வதால் தக்காளி விளைச்சல் பாதித்து வரத்து குறைந்தது.
இதனால், கடந்த சில நாள்களாக ஈரோடு நேதாஜி காய்கறி சந்தையில் தக்காளி கிலோ ரூ.100க்கும், கடைகளில் ரூ.110 முதல் ரூ.115க்கும் விற்பனையானது. கா்நாடகம், மஹாராஷ்டிராவில் இருந்து கடந்த இரண்டு நாள்களாக தக்காளி வரத்து அதிகரித்தது.
Advertisement
இதனால், 25 கிலோ எடை கொண்ட பெட்டி ரூ.1,300க்கும், 15 கிலோ பெட்டி ரூ.750க்கும் மொத்த விலையில் வியாழக்கிழமை விற்பனையானது. சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கும், சில்லறை விற்பனைக் கடைகளில் கூடுதலாக ரூ.10 சோ்த்து விற்பனை செய்யப்பட்டது.
அதிகமாக தக்காளி விளையும், தாளவாடி பகுதிக்கும் பிற மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வந்தது.
வரும் நாள்களில் கூடுதல் லாரிகளில் தக்காளி வர வாய்ப்புள்ளதால் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.