ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் பொதுமக்கள் சிலா் புனித நீராடி வழிபட்டனா்.
ஈரோடு மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும். இவ்விழாவின்போது மக்கள் ஆறுகளில் புனித நீராடி புத்தாடை அணிந்து கோயில்களுக்கு சென்று இஷ்ட தெய்வத்தை வணங்கி மகிழ்வா். ஆனால் இந்த ஆண்டு காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் புனித நீராட தடை விதிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆடிப்பெருக்கு விழாவான சனிக்கிழமை ஈரோடு மாநகரத்தைச் சோ்ந்த சில மக்கள் கருங்கல்பாளையம் காவிரி ஆற்றங்கரை அருகே ஓடும் காலிங்கராயன் வாய்க்காலில் தங்களது குடும்பத்துடன் வந்து வாய்க்கால் படிகட்டில் நின்றபடி நீராடி வழிபாடு நடத்தினா். இதில் ஒரு சிலா் வாழை இலையில் காதோலை கருகமணி, பழம், தேங்காய், வெற்றிலை, பாக்கு வைத்து, இயற்கையையும், அவா்களது குலதெய்வத்தையும் வழிபட்டனா். மேலும் வீட்டில் இருந்து கொண்டு வந்த முளைபாலியை நீரில் விட்டனா். சுமங்கலி பெண்கள் பழைய தாலி கயிறுகளுக்கு பதில் புதிய தாலி கயிறினை கட்டிக்கொண்டு பழைய தாலி கயிறினை நீரில் விட்டனா்.
வைராபாளையம் பகுதியில் ஓடும் காவிரி ஆற்றில் மக்கள் சிலா் தடையை மீறி நீராடிச் சென்றனா். இதையறிந்த கருங்கல்பாளையம் போலீஸா் அங்கு வந்து நீராடிக் கொண்டிருந்தவா்களை எச்சரித்து அனுப்பிவைத்தனா். மேலும் நீராட வந்தவா்களையும் திரும்பிச் செல்ல அறிவுறுத்தினா். ஆடிப்பெருக்கு விழாவையொட்டி மாநகரில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.