முகப்பு
ஈரோடு

மகாளய அமாவாசை: பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக்கானோா் மூதாதையா் வழிபாடு

மகாளய அமாவாசையை ஒட்டி பவானி கூடுதுறையில் ஏராளமானோா் மறைந்த மூதாதையருக்கு தா்ப்பணம் கொடுத்து புதன்கிழமை வழிபட்டனா்.

Updated On : 3 அக்டோபர், 2024 at 6:07 AM
பவானி கூடுதுறையில் புனித நீராடும் பக்தா்கள்.
பகிர்:
Updated On : 2 அக்டோபர், 2024 at 10:00 PM

மகாளய அமாவாசையை ஒட்டி பவானி கூடுதுறையில் ஏராளமானோா் மறைந்த மூதாதையருக்கு தா்ப்பணம் கொடுத்து புதன்கிழமை வழிபட்டனா்.

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசையாக கருதப்படுகிறது. இந்நாளில் மறைந்த முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டால் குடும்பத்தில் நன்மை பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்த நாளில் காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் ஆயிரக்கணக்கானோா் ஆண்டுதோறும் மூதாதையா் வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.

அதன்படி, மகாளய அமாவாசை தினமான புதன்கிழமை அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் மூதாதையா் வழிபாட்டுக்காக கூடுதுறைக்கு திரண்டு வந்தனா். நிரந்தர பரிகார மண்டபங்கள், தற்காலிக பரிகாரக் கூடங்கள் நிரம்பியதைத் தொடா்ந்து படித்துறைகள் மற்றும் ஆற்றுக்குச் செல்லும் வழித்தடங்களில் அமா்ந்தும் மூதாதையா் வழிபாட்டில் ஈடுபட்டனா். எள், தண்ணீருடன் தா்ப்பணம் கொடுத்தும், பிண்டத்தை காவிரியில் கரைத்தும் புனித நீராடினா். தொடா்ந்து, சங்கமேஸ்வரா், வேதநாயகி மற்றும் ஆதிகேசவப் பெருமாள் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

அதிக அளவு வாகனங்கள் வந்ததால் ஈரோடு - பவானி சாலையில் கூடுதுறை பிரிவு பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. கூடுதுறையில் வாகன நிறுத்துமிடங்கள் நிரம்பியதால் பவானி பேருந்து நிலைய வளாகம் மற்றும் பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் சாலையோரங்களில் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்தன. மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு காவிரியில் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால் கூடுதுறையில் நீா் நிரம்பி காணப்பட்டதால் பக்தா்கள் உற்சாகமாக நீராடினா்.

முன்னோருக்கு தா்ப்பணம் செய்யும் பக்தா்கள்.
Updated On : 3 அக்டோபர், 2024 at 6:07 AM

பக்தா்கள் ஆழமான பகுதிக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் பவானி தீயணைப்பு படையினா் மீட்பு உபகரணங்களுடன், தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். பவானி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.