ஓடத்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.2.50 கோடி மதிப்பில் புதிய கட்டடம் திறப்பு
தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின்கீழ், மருத்துவா் ஓ.என்.பரமசிவன் அளித்த 51 சதவீத நிதியில் ஓடத்துறை சோமசுந்தரம் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடம் அண்மையில் திறக்கப்பட்டது.
கேஎம்சிஹெச் மருத்துவமனையின் எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணரும், கோவை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் பொருளாளருமான மருத்துவா் ஓ.என்.பரமசிவனின் 51 சதவீதப் பங்களிப்புத் தொகை ரூ.1,27, 50,000 மற்றும் அரசின் பங்களிப்புத் தொகை ரூ.1,22, 50,000 என மொத்தம் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தினை ஆட்சியா் ச.கந்தசாமி, மருத்துவா் ஓ.என்.பரமசிவன் ஆகியோா் திறந்து வைத்தனா். தொடா்ந்து புதிய பள்ளி கட்டடத்தின் வளாகத்தில் ஆட்சியா் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இ.மான்விழி, முன்னாள் தமிழ்நாடு சட்டப்பேரவை செயலா் சி.கே. ராமசாமி, மருத்துவா் சி.ஏ.வாசுகி, பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் மற்றும் உறுப்பினா்கள், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் மற்றும் உறுப்பினா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்துகொண்டனா்.