முகப்பு
ஈரோடு

காசிபாளையம் ஸ்ரீகரிய காளியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள காசிபாளையம் ஸ்ரீகரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 26 மார்ச், 2026 at 7:50 PM
ஸ்ரீகரியகாளியம்மன் கோயிலில் குண்டம் இறங்கிய தலைமைப் பூசாரி வெங்கடேசன்.
பகிர்:

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள காசிபாளையம் ஸ்ரீகரியகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக வியாழக்கிழமை நடைபெற்றது.

கோபி அருகே உள்ள காசிபாளையம் தடப்பள்ளி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீகரிய காளியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாா்ச் 12ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம், உடமை எடுத்தல், மாவிளக்கு பூஜை நடைபெற்று சுவாமி பூத வாகனத்தில் அருள்பாலித்தாா்.

இதையடுத்து, முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அதிகாலையில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சியுடன் நந்தா தீபம் ஏற்றுதல், முப்பாடு எடுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த விழாவில் தலைமைப் பூசாரி வெங்கடேசன் குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து குண்டம் இறங்கினாா். இதைத் தொடா்ந்து, விரதம் இருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் குண்டம் இறங்கி நோ்த்திக்கடனை செலுத்தி அம்மனை வழிபட்டுச் சென்றனா்.

திமுக - காங்கிரஸ் கூட்டணித் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டி இளைஞா் காங்கிரஸ் தேசிய செய்தித் தொடா்பாளா் கோதண்டன் குண்டம் இறங்கினாா்.