நீலகிரி மலை ரயில் தனியாருக்கு வாடகை: ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கைது
நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டுப்பாளையம் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர்
நீலகிரி மலை ரயிலை வாடகைக்கு ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேட்டுப்பாளையம் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை நீலகிரி மலை இரயில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த இரயிலுக்கு பாரம்பரிய சின்னம் என்று யுனெஸ்கோ சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் கரோனா தொற்று காரணமாக கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக மலை இரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் மலை இரயில் போக்குவரத்து மீண்டும் துவங்குவது குறித்து தென்னக இரயில்வே நிர்வாகம் எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் TN 43 என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் மலை இரயிலை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்பொழுது வார இறுதி நாள்களில் மட்டும் இயக்க திட்டமிட்டுள்ள தனியார் நிறுவனத்தினரால் கடந்த 5 மற்றும் 6-ம் தேதி இரண்டு நாள்கள் மலை இரயில் போக்குவரத்து நடைபெற்றது. அதில் உதகை வரை செல்ல பயணக் கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.3000 வசூல் செய்ததால் பொதுமக்கள் அதிருப்த்தி அடைந்துள்ளனர்.
மேலும் எதிர்காலத்தில் இந்தக் கட்டணத்தை எட்டாயிரத்திலிருந்து பத்தாயிரம் வரை உயர்த்த தனியார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரயில்வே நிர்வாகம் உதகை வரை பயணக் கட்டணமாக ரூ.50க்கும் குறைவாக பெற்று வந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் கட்டணக் கொள்ளை அனைவரிடமும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து மலை இரயிலை தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கிய இரயில்வே நிர்வாகத்திற்கு கண்டனம் தெரிவித்து 160 சுற்றுலாப் பயணிகளுடன் சனிக்கிழமை உதகை செல்ல இருந்த மலை இரயிலை மறிக்க முயன்ற அரசியல் கட்சிகள், மற்றும் பொது நல அமைப்பினர் மேட்டுப்பாளையம் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் 200க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.
மேலும் தனியார் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்து, இரயில்வே நிர்வாகம் நேரடியாக மலை இரயிலை இயக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மலை ரயிலில் ரயில்வே நிர்வாகத்தின் ஸ்டிக்கரை நீக்கிவிட்டு தனியார் நிறுவனத்தின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததற்கு அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலம் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து ஒட்டப்பட்டிருந்த தனியார் நிறுவனத்தில் ஸ்டிக்கர் அகற்றப்பட்டு ரயில் இயக்கப்பட்டது.
ரயிலில் துப்பாக்கி ஏந்திய 16 போலீசார் பாதுகாப்பு பணியில் மேட்டுப்பாளையத்திலிருந்து உதவிக்கு சென்றுள்ளனர்.
மலை ரயிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் சென்றது இதுவே முதல் முறையாகும்.
இதோடு மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை சுற்றிலும் மலை ரயிலை யாரும் முற்றுகையிட கூடாது என்பதற்காக பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.