முகப்பு
திருப்பூர்

வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம்

திருப்பூர் மாவட்ட வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர்அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 நவம்பர், 2018 at 3:49 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 10:47 PM


திருப்பூர் மாவட்ட வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர்அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி தலைமை வகித்தார். இதில், பொதுமக்கள் அளித்த மனு விபரங்கள்:
தாராபுரம் நாகராஜன்: கோயிலில் அர்ச்சகராகப் பணியாற்றி வரும் எனக்கு அரசிடம் இருந்து வந்துகொண்டிருந்த முதியோர் உதவி தொகை கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து நின்று விட்டது. நிறுத்திவைக்கப்பட்ட நிலுவைத் தொகையுடன் உதவித் தொகையை வழங்க வேண்டும்.
கட்சி சார்பற்ற விவசாய சங்கம்: காடையூர், சடையம்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்கு பண்ணாடிபுதூரில் பால் சேகரிப்பு மையம் உள்ளது. எங்களுக்குத் தேவையான பாலை அருகில் உள்ள சடையம்பாளையம் சொஸைட்டியில் வாங்கிக் கொள்கிறோம். இந்நிலையில் எங்கள் ஊரின் பெயரைச் சொல்லி வெளியூரைச் சேர்ந்த ஒருவர் பால் கூட்டுறவு சொஸைட்டியை பதிவு செய்யப்போவதாகத் தெரியவருகிறது. இதற்கு அனுமதி தரக் கூடாது.
இந்து மக்கள் கட்சி: திருப்பூரில், கடந்த தீபாவளியன்று பல சிறுவர்கள் மீது உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மீறி காலம் தவறி பட்டாசு வெடித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தகைய வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.
மூலனூர் மக்கள்: மூலனூர் ஒன்றியம், கிழாங்குண்டம் ஊராட்சி, செம்மாண்டங்கவுண்டன் புதூரில் பெருமளவில் அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்தக் கிராமத்தில் நத்தம் புறம்போக்கு நிலம் ஒரு ஏக்கருக்கும் மேல் உள்ளது.
இதில் மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப ஆதிதிராவிட நலத் துறை சார்பில் சமுதாய நலக் கூடம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, நில அளவீடும் செய்யப்பட்டது. எனவே விரைவில் இந்தப் பணியைத் தொடங்க வேண்டும். குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.