அவிநாசியில் திடீரென மின்னல் தாக்கியதில், தோட்டத்துக்குள் இருந்து தென்னை மரங்கள் சனிக்கிழமை மாலை தீப்பிடித்து எரிந்தது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியில் கடந்த சில வாரங்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அதிகளவில் வெளியில் வர தயக்கம் காட்டி வருகின்றனர்.
இதன்தொடர்ச்சியாக சனிக்கிழமை காலை முதலே அதிகளவு வெப்பம் நீடித்த நிலையில், மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து திடீரென இடி, மின்னலுடன் பலத்த காற்று விசியதில், அவிநாசி முத்துச்செட்டிபாளையம் கோயில் வீதி, சின்னத் தோட்டத்திற்குள் இருந்த தென்னை மரம் மின்னல் தாக்கி தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
அடுத்தடுத்த மரங்களின் மீது தீ பரவத் துவங்கி பார்த்த பொதுமக்கள், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவயிடத்திற்கு வந்த அவிநாசி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
இதனால், தோட்டத்துப் பகுதி மற்றும் அருகில் உள்ள கட்டடங்களில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.