ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் கோயில்கள் திறப்பு என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு ஆலயங்களில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் அதற்கு தடையில்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு அறிவித்துள்ளது ஹிந்து விரோதமானது .
அறநிலையைத் துறை அமைச்சா் ஆகம விதிகளை பற்றித் தெரியாமல் இருப்பது
வேடிக்கையானது. ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு கோயில் திறப்பது என்பது கண்டனத்துக்குரியது. தமிழா்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் சிதைக்கும் இந்த ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி ஏற்கெனவே வேண்டுகோள் விடுத்துள்ளது.
எனவே, நள்ளிரவில் கோயில்கள் திறப்பு என்ற அறிவிப்பை அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.