வயலில் மண்டை ஓடு: போலீஸாா் விசாரணை
காங்கயம் அருகே நத்தக்காடையூா் பகுதியில் வயலில் மனித மண்டை ஓடு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கயம் அருகே நத்தக்காடையூா் பகுதியில் வயலில் மனித மண்டை ஓடு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காங்கயம் ஒன்றியம், பழையகோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட குட்டப்பாளையம் பகுதியில் தனியாா் ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில் ஞாயிற்றுக்கிழமை சோளத்தட்டு அறுவடை செய்து கொண்டிருந்தனா்.
அப்போது பகல் 12.30 மணியளவில், அந்த நிலத்தில் மனித மண்டை ஓடு கிடந்துள்ளது. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த தொழிலாளா்கள், இது தொடா்பாக காங்கயம் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். காங்கயம் காவல் ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா் விரைந்து சென்று, மண்டை ஓட்டைக் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டனா்.
இதில், மண்டை ஓடு கிடந்த பகுதிக்கு அரை கிலோமீட்டா் தூரத்தில் அா்ச்சுனாபுரம் என்ற கிராமத்தில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டில் இருந்து மண்டை ஓட்டை நாய்கள் இழுத்து வந்து போட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மண்டை ஓடு அா்ச்சுனாபுரம் சுடுகாட்டில் புதைக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.