திருப்பூரில் இளைஞரைக் கொலை செய்து தலையை தூக்கிச் சென்ற மர்ம கும்பல்
திருப்பூரில் இளைஞரைக் கொலை செய்து தலையைத் தூக்கிச் சென்ற மர்ம கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பூரில் இளைஞரைக் கொலை செய்து தலையைத் தூக்கிச் சென்ற மர்ம கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
திருப்பூர் செரங்காடு பகுதியில் உள்ள தனியார் எம்பிராய்டரிங் நிறுவனத்தில் இருநாள்களுக்கு முன்பாக கும்பகோணத்தைச் சேர்ந்த சதீஷ்(24) என்பவர் பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் திருச்சியைச் சேர்ந்த ரஞ்சித்(22) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். இந்த இருவரும் செரங்காடு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இருவரையும் சுற்றிவளைத்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.
மேலும், இருவரிடம் இருந்த பணம், கைப்பேசி ஆகியவற்றையும் பறித்துள்ளனர். இவர்களிடமிருந்து பலத்த தப்பிய ரஞ்சித் அப்பகுதியில் உள்ள குடியிருப்புக்கு சென்றுள்ளார். அங்கு அவர் பலத்த காயமடைந்ததைத் பார்த்த பொதுமக்கள் நல்லூர் ஊரக காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இதன் பேரில் அங்கு வந்த காவல் துறையினர் காயமடைந்த ரஞ்சித்தை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனிடையே, சதீஷை மர்ம கும்பல் தூக்கிச் சென்றதாக ரஞ்சித் தெரிவித்த தகவலின்பேரில் செரங்காடு பகுதிக்கு காவல் துறையினர் விரைந்தனர். அப்போது அங்கு சதீஷின் உடல் மட்டுமே இருந்ததால், அதிர்ச்சியடைந்தனர். மேலும், அவரைக் கொலை செய்த மர்ம கும்பல் தலையைத் தூக்கிச் சென்றது. இதுகுறித்த தகவலின்பேரில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் ஏ.ஜி.பாபு, துணை ஆணையர் ரவி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
மர்ம நபர்கள் தாக்கியதில் காயமடைந்த ரஞ்சித்.
மேலும், கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலையானது வழிப்பறிக்காக நடைபெற்றுள்ளதா அல்லது முன்விரோதம் காரணமாக என்பது குறித்தும் தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் மாநகர் மற்றும் புறநகரில் உள்ள அனைத்து சோதனைச்சாவடிகளிலும் காவல் துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.