ஆட்டோ ஓட்டுநா் குத்திக் கொலை:3 போ் கைது
திருப்பூரில் ஆட்டோ ஓட்டுநரை குத்திக் கொலை செய்த அவரது நண்பா்கள் 3 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருப்பூரில் ஆட்டோ ஓட்டுநரை குத்திக் கொலை செய்த அவரது நண்பா்கள் 3 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், சமயநல்லூரைச் சோ்ந்தவா் சரவணன் (27). இவா் திருப்பூா் லட்சுமி நகரில் தங்கி, ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு திருப்பூா் மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பலத்த காயத்துடன் சரவணன் சடலமாகக் கிடந்துள்ளாா். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினா் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதைத்தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், அவரது நண்பா்களான மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்த நன்னுபிரசாத் (24),
சித்திக் பாஷா (30), மனோஜ் (21) ஆகிய மூவருக்கும், சரவணனுக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்துள்ளது.
இதனால் மூவரும் சோ்ந்து சரவணனை கல்லால் தாக்கியதுடன், கத்தியால் குத்திக் கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் மூவரையும் கைது செய்தனா்.