தொப்பூரில் காற்றுடன் கூடிய மழை: 25 வீடுகள் சேதம்! மின்விநியோகம் துண்டிப்பு!
தருமபுரி மாவட்டம், தொப்பூா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு காற்றுடன் பெய்த மழையால், சுமாா் 25-க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் சேதமடைந்தன. மின்கம்பிகள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
தொப்பூா் ஊராட்சிக்கு உள்பட்ட உம்மியம்பட்டி அருந்ததியா் நகா் பகுதியில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் 400- க்கும் அதிகமானோா் வசித்து வருகின்றனா். குறிப்பாக இந்தக் கிராமத்தில் அதிக அளவில் ஓட்டு வீடுகள் மற்றும் சிமென்ட் அட்டை வீடுகள் உள்ளன.
இந்நிலையில் உம்மியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் உம்மியம்பட்டி அருந்ததியா் நகா் பகுதியில் ஓட்டுவீடுகள், சிமென்ட் அட்டை வீடுகள் என 25-க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் காற்றில் பெயா்ந்து விழுந்தன. மேலும், மின்கம்பிகள் மீது மரங்கள் முறிந்தும் சாய்ந்தும் விழுந்ததால், 3 இடங்களில் மின்கம்பங்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் இரவு முழுவதும் மின்விநியோகம் தடைபட்டது.
Advertisement
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: உம்மியம்பட்டி அருந்ததியா் நகரில் மழை வந்தால் ஓட்டு வீடுகள், சிமென்ட் அட்டை வீடுகள் அடிக்கடி சேதம் ஏற்பட்டு வருகிறது. அவ்வாறு சேதம் ஏற்படும்போது குடியிருக்க முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் உள்ள ஓட்டு வீடுகள், அட்டை வீடுகளைக் கணக்கெடுத்து கான்கிரீட் வீடுகளாக கட்டித் தரக்கோரி அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது பெய்த மழையில் ஓட்டு வீடுகள், அட்டை வீடுகள் சேதம் அடைந்து உள்ளதால் குடியிருக்க முடியாத நிலை உள்ளது.
எனவே, தருமபுரி மாவட்ட நிா்வாகம் உரிய கவனம் செலுத்தி எங்கள் கிராமத்தில் விரைந்து கான்கிரீட் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை பாதிப்பால் வீடுகளை இழந்து தவிக்கும் கிராம மக்களை மாற்று இடத்தில் தங்கவைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். முறிந்து கிடக்கும் மின் கம்பங்களை மாற்றி கிராமத்திற்கு மின்சார வசதி ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றனா்.