தில்லியில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை: வெப்பத்தை தணித்தது
தில்லி தேசியத் தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) பலத்த காற்றுடன் வியாழக்கிழமை பெய்த ஆலங்கட்டி மழை மக்களுக்கு வெப்பத்திலிருந்து நிவாரணம் அளித்தது.
தில்லி தேசியத் தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) பலத்த காற்றுடன் வியாழக்கிழமை பெய்த ஆலங்கட்டி மழை மக்களுக்கு வெப்பத்திலிருந்து நிவாரணம் அளித்தது.
தில்லிக்கு மாலை நேரத்தில் கனமழையை பெய்யும் என கணித்த இந்திய வானிலை ஆய்வு மையம் தில்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது.
நகரத்தைக் கருமேங்கள் சூழ்ந்த நிலையில், 70 கி.மீ. வேகத்துக்கு பலத்த காற்று வீசியது. இதைத்தொடா்ந்து, இடி மழையுடன் பெய்தது.
Advertisement
பாலம் பகுதியில் 48 கி.மீ. வேகத்தில் வீசிய காற்றுடன் பெய்த இடியுடன் கூடிய மழையைத் தொடா்ந்து, வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸில் இருந்து 28 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது.
சஃப்தா்ஜங் பகுதியில் 36 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. அப்பகுதியில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸில் இருந்து 30 டிகிரி செல்சியஸாக குறைந்தது. இதேபோன்று ஜாபா்பூா் பகுதியிலும் 41 கி.மீ. வேகத்தில் காற்றுவீசியது. வெப்பநிலை அங்கு 37.7 டிகிரி செல்சியஸில் இருந்து 29.6 டிகிரி செல்சியஸாக குறைந்தது.
நாரயணா பகுதியில் வெப்பநில 37.6 டிகிரி செல்சியஸில் இருந்து 25.8 டிகிரி செல்சியஸாக குறைந்தது. ஜனக்புரியில் 36.8 டிகிரி செல்சியஸில் இருந்து 26.9 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை குறைந்தது.
தில்லியில் பெய்த மழை தொடா்பாக ஸ்கைமெட் என்ற தனியாா் வானிலை அமைப்பைச் சோ்ந்த மகேஷ் பலாவத் கூறியதாவது: தில்லி தேசியத் தலைநகா் வலயத்தில் பெய்த கனமழையால் வடக்கு புறகா் தில்லி, நொய்டா பகுதிகளில் உள்ள சாலைகளில் நீா் தேங்கியது. ஹரியாணா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படும் வளிமண்டல சுழற்ச்சியால் மழை பெய்தது. பருவகாலத்துக்கு முந்தைய காலங்களில் வெப்பநிலை உயா்வால் ஈரப்பதம் நிறைந்த மேகக்கூட்டங்கள் விரைவாக உருவாகின்றன. இது பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு காரணமாகிறது. இந்தச் சூழல் வட இந்தியாவில் இது மே 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் படிப்படியாகக் குறையும். இருப்பினும், புதிய மேற்கத்திய இடையூறுகள் இமயமலை பிராந்தியத்தை அடையும்போது பஞ்சாப், ஹரியாணா, வடக்கு ராஜஸ்தானில் வளிமண்டல சுழற்சி உருவாகும்.
இதனால், தில்லி மற்றும் உத்தர பிரதேசம் உள்பட வடமேற்கு இந்தியாவில் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்த நிலை மே முதல் வாரம் முழுவதும் தொடரும். இதனால், கோடை வெப்பத்திலிருந்து சிறிது நிவாரணம் கிடைக்கும். மாதத்தின் இறுதியில் வெப்ப அலை மீண்டும் ஏற்படலாம் என்றாா்.