குடியிருப்புப் பகுதி வழியாக விரைவுச் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு
குடியிருப்புப் பகுதி வழியாக விரைவுச் சாலை அமைக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து வேடகட்டமடுவு கிராம மக்கள் மனு அளித்தனர்.
குடியிருப்புப் பகுதி வழியாக விரைவுச் சாலை அமைக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து வேடகட்டமடுவு கிராம மக்கள் மனு அளித்தனர்.
இது தொடர்பாக, அரூர் அருகே வேடகட்டமடுவு கிராம மக்கள் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழியிடம் அளித்த மனு: சேலத்திலிருந்து சென்னைக்கு அரூர் வழியாக விரைவுச் சாலை அமைக்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.
இந்த நிலையில், அரசு சாலை அமைப்பதற்கென அறிவித்த இடத்தைத் தவிர்த்து, தற்போது சுமார் 350-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் அருந்ததியர், தலித் மக்கள் வசித்து வரும் வேடகட்டமடுவு கிராம வழியாகச் சாலை அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக அளவீட்டுப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. இக்கிராமம் வழியாகச் சாலை அமைத்தால், பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் நாங்கள் எங்களது சொந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டிய சூழல் நிலவும். எங்களது கிராமமே காணாமல் போகும் நிலை ஏற்படும்.
எனவே, எங்களது வாழ்வாதாரம் கருதி, வேடகட்டமடுவு கிராமம் வழியாக விரைவுச் சாலை அமைக்கும் முயற்சியை கைவிட்டு, ஏற்கெனவே அரசு அறிவித்த வழியாகச் சாலை அமைக்கும் பணியினை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.