பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்தால் அதிகபட்ச ஊதியத்துடன் நல்ல வேலை வாய்ப்பு!
பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் பட்டயப் படிப்பு (டிப்ளமோ) முடித்தாலுமே அதிகபட்ச ஊதியத்தில் நல்ல வேலை
பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் பட்டயப் படிப்பு (டிப்ளமோ) முடித்தாலுமே அதிகபட்ச ஊதியத்தில் நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தமிழ்நாடு சுய நிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் சங்கத் தலைவர் கந்தசாமி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது:
புது தில்லியைச் சேர்ந்த ஜாமியா மிலியா இஸ்லாமியா என்ற பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் பட்டயப் படிப்பை முடித்த (2015-18) மாணவர் முகமது அமீர் அலி என்பவருக்கு அமெரிக்க நாட்டில் ஆண்டுக்கு ரூ. 70 லட்சம் ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது. பேட்டரி மேலாண்மை சிஸ்டம் இன்ஜினீயராக அவருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது. டிசம்பரில் இப் பணியில் அவர் சேரவுள்ளார்.
பொறியியல் பட்டயப் படிப்பு படித்தவர்களில் மிக அதிக ஊதியம் பெற்றவராக முகமது அமீர் அலி கருதப்படுகிறார். அவரது தந்தை சம்ஷத் அலி, அதே கல்லூரியில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார்.
எனவே, பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்பு முடிப்போருக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நல்ல எதிர்காலம் உள்ளது. எதிர்காலத் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் மாணவர்களுக்கு அதிகபட்ச ஊதியம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொறியியல் பட்டப் படிப்புக்கு சற்றும் குறைவில்லாத வகையில் பட்டயப் படிப்புகளும் உள்ளன. எனவே, பள்ளிப் படிப்பில் 10 ஆம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் உடனே சேரலாம். பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டயப் படிப்புகளில் சேரலாம்.
அத்துடன், பட்டயப் படிப்பில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் பொறியியல் பட்டப் படிப்புகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர முடியும். எனவே, பள்ளி மாணவர்களின் தொழில்நுட்பக் கனவுகளை பாலிடெக்னிக் கல்லூரிகள் நிறைவேற்றுகின்றன என்றார் கந்தசாமி.